Published : 05 Oct 2024 01:43 PM
Last Updated : 05 Oct 2024 01:43 PM

திருமலை கோயிலின் புனிதத்தை நிலைநாட்ட வேண்டும்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

திருமலையில் மையப்படுத்தப்பட்ட சமையலறையை திறந்து வைத்த சந்திரபாபு நாயுடு

திருப்பதி: திருமலை கோயிலின் புனிதத்தை நிலைநிறுத்த வேண்டியது மிகவும் முக்கியம், இங்கு 'கோவிந்த நாமங்கள்' கோஷம் ஒலிக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதி திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இன்று (அக்.5) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராம்நாராயண ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜே. ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அலுவலர் வீரய்யா சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, “மலைக்கோயிலின் புனிதத்தை நிலைநிறுத்த வேண்டியது மிகவும் அவசியம். கோயில் அமைந்துள்ள மலை உச்சியில் 'கோவிந்த நாமங்கள்' கோஷம் மட்டுமே ஒலிக்க வேண்டும். ஆன்மிகச் சூழலை எந்தவித சமரசமும் இன்றி பாதுகாக்க வேண்டும்.

பக்தர்களின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நீர் இருப்பை உறுதி செய்ய மேம்பட்ட திட்டமிடல் தேவை. திருமலை வனப்பகுதியில் தற்போது 72% காடுகள் உள்ளன. பரந்த வனப் பாதுகாப்பு மற்றும் விரிவாக்க முயற்சிகளுடன் அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 80% ஆக உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான முயற்சிகள் குறித்த அறிக்கைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும்.

பக்தர்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் தங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் படிப்படியாக இதுபோன்ற முறையை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.

லட்டுகள் உள்ளிட்ட கோயில் பிரசாதங்களின் தரம் நிலையானதாகவும், மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். அவற்றைத் தயாரிக்க சிறந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

திருமலையில் வளர்ந்து வரும் விஐபி கலாச்சாரம் தீவிர கவலைகளை அளிக்கிறது. ஆடம்பரம் இல்லாத, அதிக செலவு இல்லாத எளிமையான, ஆன்மிக அனுபவம் விஐபிக்களுக்கு கிடைக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்து பக்தர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். எந்தவிதமான முரட்டுத்தனமான நடத்தையும் பக்தர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது. பக்தர்கள் திருப்தியுடனும் ஆன்மிக நிறைவுடனும் வீடு திரும்ப வேண்டும். திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.

இந்த பயணத்தின்போது, திருமலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிறுவப்பட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறையை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x