Published : 08 Aug 2014 02:48 PM
Last Updated : 08 Aug 2014 02:48 PM
மக்களவையில் முதல் முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கும், மத்திய அமைச்சர் ஒருவர் தமிழிலேயே பதிலளித்துள்ளார்.
மக்களவையில் அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தமிழில் எழுப்பிய துணைக் கேள்விக்கு மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழில் பதிலளிக்க சபாநாயகர் அனுமதியை கோரினார். அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழிலேயே பதிலளித்தார்.
அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன், சீன பட்டாசுகள் ஊடுருவலால் தமிழகத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறினார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் வினவினார்.
இதற்கு தமிழில் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "புரட்சித் தலைவி அம்மா அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதிலளித்தபோது, அதை அருகில் அமர்ந்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி புன்முறுவலுடன் இருந்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பூர்விகம் தமிழகம் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT