Published : 03 Oct 2024 04:29 PM
Last Updated : 03 Oct 2024 04:29 PM

ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்கில் இனி உச்ச நீதிமன்றம் விசாரணை - நடந்தது என்ன?

புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள அதன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில், காவல் துறை மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பூண்டியை அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. சத்குரு இதன் நிறுவனராக உள்ளார். ஈஷா யோகா மையத்தின் சார்பில், பல்வேறு வித யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகியை தரிசிக்கவும், தியானலிங்கத்தை தரிசிக்கவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “எனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தில், யோகா கற்கச் சென்றனர்.

அதன் பின்னர், அவர்கள் அங்கயே தங்கி விட்டனர். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்தல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நானும், எனது மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான், எனது மகள்களுடன் பேச முடியும் என அவர்களது தரப்பில் கூறப்படுகிறது. எனது மகள்களை மீட்டுத் தர வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஆய்வு செய்து, வரும் 4-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முன்னிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மொத்தம் 6 குழுக்களாக பிரிந்து ஈஷா வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். நாளை (அக்.4) இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈஷா யோகா மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த மனு அவசர வழக்காக, இன்று (அக்.3) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கில், காவல் துறையினர் மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது. அடுத்த விசாரணையின்போது, புகார்தாரர் காமராஜ் அல்லது அவரது தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி வழியாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x