Published : 01 Oct 2024 01:00 PM
Last Updated : 01 Oct 2024 01:00 PM

“இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்தை பாதுகாக்கும்” - ராகுல் காந்தி

புதுடெல்லி: இண்டியா கூட்டணிக்காக அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஜம்மு காஷ்மீரின் எதிர்கால அடித்தளத்தை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“ஜம்மு காஷ்மீரில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், மாநிலத்தின் சுயமரியாதைக்கான தேர்தல், மாநில மக்களின் உரிமைக்கான தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அனைத்து வாக்காளர்களும் தங்கள் வீடுகளை விட்டு அதிக எண்ணிக்கையில் வந்து இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவுக்காக நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஜம்மு காஷ்மீரின் எதிர்கால அடித்தளத்தை பாதுகாக்கும், மேலும் உங்கள் உரிமைகளுக்காக போராடும் வலிமையை உங்களுக்கு வழங்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

28% வாக்குப்பதிவு: இதற்கிடையில், காலை 11 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் 28.12% வாக்குப்பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத் தரவுகளின்படி ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூரில் 33.84%, கதுவாவில் 31.78%, சம்பாவில் 31.50%, பந்திப்போராவில் 28.04%, குப்வாராவில் 27.34, ஜம்முவில் 27.15%, பாரமுல்லாவில் 23.02% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு இன்று (அக்.1) காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

415 வேட்பாளர்கள்: தேர்தல் களத்தில் 415 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 17 பேர் முன்னாள் அமைச்சர்கள், 8 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள், 4 பேர் விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x