Published : 01 Oct 2024 11:02 AM
Last Updated : 01 Oct 2024 11:02 AM

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 11.6% வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் 3-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 11.6% வாக்குப்பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத் தரவுகளின்படி உத்தம்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 14.2%, அடுத்ததாக சம்பா மாவட்டத்தில் 13.3% வாக்குப் பதிவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு இன்று (அக்.1) காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 11.6% வாக்குப்பதிவாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

415 வேட்பாளர்கள்: தேர்தல் களத்தில் 415 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 17 பேர் முன்னாள் அமைச்சர்கள், 8 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள், 4 பேர் விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x