Published : 01 Oct 2024 04:02 AM
Last Updated : 01 Oct 2024 04:02 AM

காஷ்மீரில் இன்று இறுதிகட்ட தேர்தல்: 40 தொகுதிகளில் 415 வேட்பாளர்கள் போட்டி

ஜம்மு-காஷ்மீரின் சாம்பா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் புறப்பட்ட தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர். படம்: பிடிஐ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இறுதிகட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.வாக்குப்பதிவு மையங்களில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 18-ம் தேதி 24 தொகுதிகளுக்கும், 25-ம் தேதி 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில், 3-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

குப்வாரா, பாரமுல்லா, பண்டிப்போரா, உதம்பூர், சாம்பா, கதுவா, ஜம்மு ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 24 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடி போட்டி உள்ளது. மற்ற 16 தொகுதிகளில் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களுக்கும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, அவாமி இதிஹாத் கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையே போட்டி உள்ளது.

தேர்தல் களத்தில் 415 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 17 பேர் முன்னாள் அமைச்சர்கள், 8 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள், 4 பேர் விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள். 3-வது கட்ட தேர்தலில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள், வாக்களிக்க தேவையான ஆவணங்களுடன் சென்றுவிட்டனர்.

வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை மேம்படுத்தி பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக காவல் துறை, ஆயுதப்படை, துணை ராணுவ படைகளை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அதிக அளவில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இன்று மாலை 6 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x