Last Updated : 27 Sep, 2024 09:37 AM

3  

Published : 27 Sep 2024 09:37 AM
Last Updated : 27 Sep 2024 09:37 AM

ஏற்றுமதி அதிகரித்து, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது: ‘மேக் இன் இண்டியா’ 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி பெருமிதம்

கோப்புப்படம்

புதுடெல்லி: ‘மேக் இன் இண்டியா’ திட்டம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் 25-ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தால் ஏற்றுமதி அதிகரித்து பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமராக கடந்த 2014-ல் நரேந்திர மோடி பதவியேற்றார். இதையடுத்து ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் அவர் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதில் பிரதமர் மோடி, ‘மேக் இன் இண்டியா’ அறி விப்பை வெளியிட்டார். தொடர்ந்து இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 25, 2014-ல் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இத்திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் சர்வதேச உற்பத்தி சந்தையின் பல முக்கியத் துறைகளில் இந்தியா தனது தடத்தை பதித்திருப்பது தெரிய வந்துள்ளது.

பத்து ஆண்டுகள் நிறைவு செய்த ‘மேக் இன் இண்டியா' குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் தயாரிப்போம்' என்பது 140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதியை பிரதிபலிக்கிறது. நமது நாட்டை உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளின் சக்தி மையமாக மாற்றுகிறது. பல்வேறு துறைகளில் ஏற்றுமதி அதிகரித்து, புதிய திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது, ‘மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல தனியார் பெருநிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர்களை இந்தியாவில் முதலீடு செய்து ‘மேக் இன் இண்டியா' திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வரும்படி அழைப்பும் விடுத்திருந்தார். பிரதமரின் இந்த அழைப்பால் பல பெருநிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து தங்கள் உற்பத்தி மற்றும் தொழில்களை வளர்க்க ஆர்வம் காட்டியுள்ளன. இதன் காரணமாக, ‘மேக் இன் இண்டியா' திட்டமானது மத்திய வர்த்தக அமைச்சகத்தால் புதிய பரிமாணத்தை காண உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: உள்நாடு, வெளிநாடு வர்த்தகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் (பிஎல்ஐ) கீழ் ரு.1,46,000 கோடி அளவிலான முதலீடுகள் பல்வேறு துறைகளில் செய்யப்பட்டுள்ளன. ‘மேக் இன் இண்டியா' திட்டத்தால் சுமார் 8.5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஸ்டார்ட்அப் தொழில் உருவாகிறது. இதன் மூலம் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இந்த தொழிலால் கடந்த ஜுன் 2024 வரை ரூ.10.90 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி அல்லது விற்பனை கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் செல்போன்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடமும் மோட்டர் தொழிலில் நான்காவது இடமும் பெற்றுள்ளது. ராணுவ தளவாடங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தி 2023-24-ம் ஆண்டில் ரூ.1,27,000 கோடியாக உயர்ந்துள்ளது. இவற்றின் ஏற்றுமதி 90 நட்பு நாடுகளுக்கு விரிவடைய உள்ளது. உலகின் தடுப்பு மருந்துகளில் 50 சதவீதம் இந்தியாவின் உற்பத்தியே ஆகும். தற்போது இந்தியா செமி கண்டக்டர் எக்கோசிஸ்டம் வளர்ச்சிக்கு ரூ.76,000 கோடி மதிப்பிலான திட்டத்தை முன்னெடுக்கிறது. இவ்வாறு அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x