Published : 17 Sep 2024 05:38 AM
Last Updated : 17 Sep 2024 05:38 AM

முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ராஜினாமா: ஆளுநர் வினய் சக்சேனாவை சந்திக்கிறார்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்’’ என்றார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேஜ்ரிவால் இவ்வாறு அறிவித்தார்.இதன்படி இன்று அவர் பதவியை ராஜினாமா செய்கிறார். டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனாவை இன்று மாலை 4.30 மணிக்கு கேஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது ராஜினமா கடிதத்தை அவர் அளிக்க உள்ளார்.

இந்த சூழலில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று கேஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியின் அரசியல் விவகார குழு நேற்றிரவு கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் நேற்று கூறியதாவது: கேஜ்ரிவாலின் ராஜினாமா ஏற்கப்பட்டவுடன் புதிய முதல்வரை தேர்வு செய்ய, ஆம் ஆத்மி சட்டப்பேரவை கட்சி கூட்டம் நடைபெறும். மொத்தம் 70 உறுப்பினர்களைகொண்ட டெல்லி சட்டப்பேரவையில் எங்களிடம் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் புதிய அரசு அமைக்க முடியும். ஒரு வாரத்துக்குள் இந்த நடைமுறைகள் முடிவடையும் என நம்புகிறேன். கேஜ்ரிவாலின் பதவிக்கு யார் வருவார்கள் என்று எனக்குத் தெரியாது. இவ்வாறு சவுரப் பரத்வாஜ் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி விதிகளின்படி குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கட்சியின் நிர்வாகி மற்றும் அரசு பதவியில் நீடிக்க முடியும். இந்த விதியில் கடந்த 2021-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படிஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகி, அரசு பதவியில் அமர வழிவகை செய்யப்பட்டது. இதை பயன்படுத்தி கேஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை முதல்வராக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் 5-ம் தேதி ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் ஜாட் மக்களை கவரஜாட் சமூகத்தை சேர்ந்த கைலாஷ்கெலாட்டை டெல்லி முதல்வராக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x