Published : 16 Sep 2024 05:30 AM
Last Updated : 16 Sep 2024 05:30 AM

உ.பி.யில் 3 மாடி கட்டிடம் இடிந்து ஒரே குடும்பத்தில் 10 பேர் உயிரிழப்பு

மீரட்: உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று முன்தினம் மாலை 3 மாடிகட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீரட்டின் ஜாகிர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5.15 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தேசிய பேரிடர்மீட்பு படை, தீயணைப்பு படை, காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மீரட் மண்டல காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டி.கே.தாகூர் இந்த விபத்து குறித்துகூறுகையில், “ஜாகிர் நகர் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்துவிழுந்ததில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 10 பேர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதன்படி, அந்த குடும்பத்தைசேர்ந்த சாஜித் (40), அவரது மகள்சானியா (15), மகன் சாகிப் (11),சிம்ரா (ஒன்றரை வயது), ரீசா(7), நஃபோ (63), பர்ஹானா (20),அலிசா (18), அலியா (6) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், நான்கு பேரைதேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பால் பண்ணை: அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கு பால் பண்ணை நடத்தி வந்துள்ளார். இதனால், 24-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதி குறுகிய பாதையாக உள்ளதால் ஜேசிபி இயந்திரங்களை மீட்பு பணியில் ஈடுபடுத்த முடியவில்லை. அதனால், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தாமதமாகி வருகிறது.இவ்வாறு தாகூர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x