Published : 15 Sep 2024 03:58 PM
Last Updated : 15 Sep 2024 03:58 PM

“நாங்கள் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் பிஹாரில் மதுவிலக்கு முடிவுக்கு வரும்” - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

பாட்னா: பிஹாரில் தனது ஜன் சூராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஒரு மணிநேரத்தில் நடைமுறையில் உள்ள மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

வரும் அக்.2-ம் தேதி தான் தொடங்க இருக்கும் ஜன் சூராஜ் கட்சி குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அக்.2-ம் தேதிக்கு எந்த சிறப்பு திட்டமும் இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் தயாராகி வருகிறோம். பிஹாரில் அடுத்து ஜன் சூராஜ் ஆட்சி வந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம். அதனால் பெண்களின் வாக்கு வங்கியை நான் இழந்தாலும் கவலை இல்லை. நான் தொடர்ந்து மதுவிலக்கைத் தடைசெய்வதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பேன். அது பிஹாரின் நலனுக்கு நல்லதில்லை. மதுவிலக்கு என்பது நிதிஷ் குமாரின் போலி நடவடிக்கையேத் தவிர வேறொன்றும் இல்லை.

தற்போதைய மதுவிலக்கு பயனற்றது. அது மது வகைகளை வீட்டுக்கே வந்து விநியோகிக்க வழிவகுக்கிறது. இதனால் மாநிலத்துக்கு ரூ.20,000 கோடி கலால் வரி மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அக்.2ம் தேதி துவங்கப்பட உள்ள ஜன் சூராஜ் கட்சி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துக்கொடுத்தவரான பிரசாந்த் கிஷோர், பிரதமர் மோடி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்காக தேர்தல்களில் வியூகங்கள் வகுத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x