Published : 13 Sep 2024 04:34 AM
Last Updated : 13 Sep 2024 04:34 AM

இந்தியா - சீனா இடையே விமான சேவையை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை

இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு

புதுடெல்லி: இரண்டாவது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக (செப். 11, 12) டெல்லியில் நடைபெற்றது.

இதில் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, துறை செயலாளர் வும்லுன்மாங் வுவல்னம் மற்றும் துறைசார் மூத்த அதிகாரிகள் சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: சீனாவின் சாங்க் ஜியாங் தலைமையிலான சீன பிரதிநிதிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பில் இந்தியா - சீனா இடையில் சிவில் விமான போக்குவரத்தில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும், பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் இரு தரப்பினரிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2020-ல் கரோனா பெருந்தொற்றின்போது இந்தியா - சீனாவுக்கு இடையில் பயணிகள் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது. அதுவரை இரு நாடுகளுக்கும் இடையில் இயக்கப்பட்டுவந்த இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானம் ஆகிய நேரடி விமான சேவைகள் தற்போதுவரை இயக்கப்படவில்லை. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே மீண்டும் பயணிகள் விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x