Published : 12 Sep 2024 06:35 PM
Last Updated : 12 Sep 2024 06:35 PM

‘என்றும் ஏழைகளின் குரலாக சீதாராம் யெச்சூரி...’ - மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி

சீதாராம் யெச்சூரி | கோப்புப் படம்

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரதமர் மோடி: “சீதாராம் யெச்சூரியின் மறைவை அறிந்து கவலையடைந்தேன். இடதுசாரி கட்சிகளின் முன்னணி ஒளிவிளக்காக திகழ்ந்த அவர், அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திறமையைப் பெற்றிருந்தார். செயல்திறன் மிக்க ஒரு நாடாளுமன்றவாதியாகவும் அவர் முத்திரைப் பதித்தார். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி.”

முதல்வர் ஸ்டாலின்: “இந்திய அரசியலில் தலை சிறந்த ஆளுமையான சீதாராம் யெச்சூரியின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இளம் வயதில் இருந்தே நீதிக்காக போராடிய பயமறியா தலைவரான அவர், மாணவர் தலைவராக இருந்தபோது, அவசர நிலைக்கு எதிராக அவர் நின்றார். தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் அவரது முற்போக்கு சிந்தனைகள் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும். அவர் உடனான எனது நினைவுகளும்,பேச்சுகளும் எப்போதும் போற்றுதலுக்குரியவை.”

ராகுல் காந்தி: “சீதாராமன் யெச்சூரி ஜி எனது நண்பர். நமது நாட்டைப் பற்றி ஆழமான புரிதல் உள்ள அவர், இந்தியா என்ற சித்தாந்தத்தின் பாதுகாவலர். நாங்கள் நடத்திய நீண்ட விவாதங்களை இனி நான் இழப்பேன். இந்தத் துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

ராஜ்நாத் சிங்: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வலி நிறைந்த ஒன்று. தனது நீண்ட கால பொது வாழ்வில், தனது அறிவு மற்றும் பேச்சுக்களால் நன்கு அறியப்பட்ட அனுபவம் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை வேறுபடுத்திக்கொண்டார். அவர் எனது நண்பராகவும் இருந்தார். நான் அவருடன் பலமுறை தொடர்பில் இருந்தேன். அவருடனான எனது உரையாடல்களை என்றும் நான் நினைவில் கொள்வேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.ஓம் சாந்தி!”

மம்தா பானர்ஜி: "சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக அவரை நான் அறிவேன் அவரது மறைவு தேசிய அரசியலுக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

சரத் பவார்: "இந்தியாவின் இடதுசாரி கட்சிகளின் முக்கியமான குரலாக சீதாராம் யெச்சூரி நினைவுகூரப்படுவார். தனது தேர்ந்த அனுபவத்தால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து இரண்டு முறை இருக்க முடிந்தது. அவரது மறைவு இடதுசாரி சித்தாந்தத்துக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரது இழப்பால், கூலிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக் குரல்கள் பறிபோய் உள்ளது."

மாயாவதி: "சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு தேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நேசத்துக்குரிய நபர். அவரது குடும்பத்தினர் மற்றும் நேசத்துக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்களுக்கு இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் வழங்கட்டும்."

சஞ்சய் சிங்: "வகுப்பு வாதத்துக்கு எதிராக அனைவரையும் அணி திரட்டிய முக்கியமான தலைவர் சீதாராம் யெச்சூரி. அவர் இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கலாம். ஆனால் ஏழைகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களில் அவர் என்றும் ஒலிப்பார். அவரது இழப்பு இந்திய அரசியலுக்கு மிகப் பெரிய இழப்பு. தோழர் சீதாராம் யெச்சூரிக்கு சிரம் தாழ்ந்த செவ்வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.12) காலமானார். அவருக்கு வயது 72. நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக் கருவிகளின் உதவியுடன் சுவாசித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். 1975-ல், ஜேஎன்யுவில் யெச்சூரி மாணவராக இருந்தபோது, ​​அவசரநிலை காலத்தில் கைது செய்யப்பட்டார். 1977-78 இடையிலான ஓராண்டில் மூன்று முறை ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x