Published : 08 Sep 2024 05:35 PM
Last Updated : 08 Sep 2024 05:35 PM

‘‘புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’: குடியரசு துணைத் தலைவர்

புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதை ஏற்காத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி விஞ்ஞான் பவனில் இன்று (08.09.2024) நடைபெற்ற சர்வதேச எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், "ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, சிறுமியோ யாராக இருந்தாலும் ஒருவருக்கு கல்வி அளிப்பதன் மூலம் நாம் பெறும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. கல்வி என்பது எந்த வகையிலும் ஒருவரிடம் இருந்து பறிக்க முடியாத ஒன்று. அதை பகிர்ந்து கொண்டே இருக்கும் வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

எழுத்தறிவை ஆர்வத்துடன் அதிகரித்தால், நாளந்தா, தக்ஷசீலா போன்ற கற்றல் மையமாக இந்தியா தனது பழைய நிலையை மீண்டும் அடைய முடியும். புதிய தேசியக் கல்விக் கொள்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த கொள்கை தேசத்திற்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். புதிய தேசியக் கல்விக் கொள்கை, நமது இளைஞர்கள் தங்கள் திறமையையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கிறது. அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தனது தாய்மொழி மிகவும் முக்கியமானது. இந்தியா இணையற்ற மொழிவாரி பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. மொழியின் செழுமையைப் பொறுத்தவரை, பல மொழிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான தேசம் இந்தியா. ஆறு மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு நபரையாவது கல்வியறிவு பெறச் செய்ய அனைவரும் உறுதியேற்க வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, பள்ளிக் கல்வித் துறை, எழுத்தறிவுத் துறைச் செயலாளர் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x