Published : 07 Sep 2024 05:44 AM
Last Updated : 07 Sep 2024 05:44 AM

பாஜகவில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்திருந்தார். இந்நிலையில் பாஜகவில் அவர் இணைந்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பித்தார். இந்த சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். அவரது மனைவியும், பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் இந்தத் தகவலை பதிவிட்டுள்ளார்.

ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

அவருக்காக ரவீந்திர ஜடேஜா பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ரிவாபா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலிருந்து பிரச்சாரம்: ரவீந்திர ஜடேஜா, மனைவிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் பாஜகவில் அவர் இதுவரை எந்தப்பொறுப்பையும் வகித்தது இல்லை. இந்நிலையில் முறைப்படி பாஜகவில் தனது கணவர் ரவீந்திர ஜடேஜா இணைந்துள்ளதை ரிவாபாஅறிவித்துள்ளார். ரிவாபா, பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை தனது வீட்டிலிருந்து தொடங்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x