Published : 05 Sep 2024 04:49 AM
Last Updated : 05 Sep 2024 04:49 AM

புருனே சுல்தான் வீட்டில் மோடிக்கு விருந்து

புதுடெல்லி: புருனே சுல்தான் வீட்டில் பிரதமர் மோடிக்கு தடபுடல் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

இந்தியா புருனே இடையேயான நட்புறவு தொடங்கி 40 ஆண்டு ஆனதை ஒட்டி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவரை புருனே இளவரசர் ஹாஜி அல்-முஸ்ததீபில்லா விமான நிலையம் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியுடன் கை குலுக்கியும். செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று புருனே ஆட்சியாளர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துப் பேசினார். உலகின் மிகப்பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது. பின்னர், சுல்தானின் அரண்மனையில் நடைபெற்ற விருத்தில் பிரதமர் மோடிக்கு மாம்பழ குங்குமப்பூ பேடா இனிப்பு, மோடி சூர் லட்டு, காய்கறிகளால் ஆன வேகவைத்த உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சென்னா மசாலா, கோப்டா பிந்தி, ஜீரா அரிசி சாதம், டாஸ்மேனியாவின் சால்மன் வகை உணவுகள் இடம்பெற்றிருந்தன. காய்கறி, அரிசியால் செய்யப்பட்ட கேக் சூப் காளான் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்த வகை உணவுகளை பிரதமர்மோடி விரும்பிச் சாப்பிட்டார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறும் போது "மதிய விருந்துக்குப்பின் இரு நாட்டு உறவுகள் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினோம். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி எங்கள் பேச்சுக்கள் பரந்த அளவில் இருந்தன. நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இந்த பேச்சுவார்த்தை உள்ளடக்கியதாக இருந்தது. வர்த்தக உறவுகள், வர்த்தக தொடர்புகள், மக்கள் பரிமாற்றம் ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்த உள்ளோம்.

எனது புருனே வருகை பயனுள்ளதாக இருந்தது. இன்னும் வலுவான இந்தியா-புருனே உறவுகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. நமது நட்பு, ஒரு சிறந்த உலகுக்கு பங்களிக்கும். புருனேயின் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் விருந்தோம்பல் மற்றும் அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் தூதுக்குழுவினருடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மதிய விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “உங்கள் அன்பான வார்த்தைகள், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றுக்காக உங்களுக்கும் முழு அரச குடும்பத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்களுக்கும் புருனே நாட்டு மக்களுக்கும் 40-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகள் உள்ளன. நமது நட்பின் அடிப்படையே நமது பண்பாட்டு பாரம்பரியம்தான்.

நாம் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்கிறோம். எனது வருகையும் கலந்துரை யாடல்களும் எதிர்வரும் காலங் களில் எமது உறவுகளுக்கு நலம் பயக்கும் வழிகாட்டலை வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்தச் சந் தர்ப்பத்தில் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன்” என்றார். இதைத் தொடர்ந்து தனது புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, சிங்கப்பூர் புறப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x