Published : 04 Sep 2024 02:38 PM
Last Updated : 04 Sep 2024 02:38 PM

குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்து: இருவர் சடலம் மீட்பு; ஒருவரது உடலை தேடும் பணி தீவிரம்

பிரதிநித்துவப்படம்

போர்பந்தர்: இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று குஜராத் கடலோரப் பகுதியில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த விமானி மற்றும் டைவர் என இரண்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மற்றொருவரின் உடலைத் தேடும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து கடலோரக்காவல் படையின் செய்தித் தொடர்பாளர் அமித் உனியால் கூறுகையில், “விமானி விபின் பாபு மற்றும் டைவர் கரண் சிங் ஆகியோரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டன. மற்றொரு விமானி ராகேஷ் ராணாவின் உடலைத் தேடும் பணி தொடர்கிறது.

இந்திய கடலோர காவல்படையின் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரில் (ஏஎல்ஹெச்) பயணித்த நான்கு பேரில், டைவர் கவுதம் குமார் சம்பவம் நடந்த சிலமணி நேரத்தில் மீட்கப்பட்டார். மீதமுள்ள இரண்டு விமானிகள் மற்றும் ஒரு டைவரை தேடும் பணிகள் நடந்து வந்தது.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை இரவு விமானி விபின் பாபு மற்றும் டைவர் கரண் சிங் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றொரு விமானி ராகேஷ் ராணாவின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடலைத் தேடும் பணியில் நான்கு படகுகள் மற்றும் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களும் கிடைத்துள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போர்பந்தர் அருகே பயணித்துக்கொண்டிருந்த டேங்கர் ஒன்றிலிருந்த காயமடைந்த பணியாளரை அழைத்துச் செல்லும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்த போது திங்கள் கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்தது.

இதனிடையே, போர்பந்தரின் நவி பந்தர் காவல்நிலையத்தில், செவ்வாய்க்கிழமை இரவு கடலில் இருந்து இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் விபத்து மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளது.

அதன்படி, “இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று நான்கு பேரை ஏற்றிக்கொண்டு நடுக்கடலில் அவசர மருத்துவ உதவிக்கான பணியில் ஈடுபட்டிருந்த போது தெரியாத காரணங்களால் கடற்கரையில் இருந்து 30 நாட்டிகல் தொலைவில் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட கவுதம் குமார் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x