Published : 04 Sep 2024 06:03 AM
Last Updated : 04 Sep 2024 06:03 AM

பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் குண்டு வீசியது தீவிரவாத செயல்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கண்டனம்

இம்பால்: மணிப்பூரில் ட்ரோன்களை பயன்படுத்தி பொது மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தீவிரவாத நடவடிக்கையாகக் கருதப்பட்டு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று முதல்வர் பிரேன் சிங் காட்டமாகக் கூறியுள்ளார்.

மணிப்பூரில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குகி-மெய்தி சமூகத்தினர் இடையில் மோதல் நீடித்து வருகிறது. இதில், கடந்த செப் 1-ம் தேதி மேற்கு இம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்ரூக், சேஞ்சம் சிராங் ஆகிய பகுதிகளில் குகி கிளர்ச்சியாளர்கள் 2 ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி பொது மக்கள் நிறைந்த இடத்தில் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் (31) உள்பட இருவர் கொல்லப்பட்டனர். அந்த பெண்ணின் 12 வயது மகள், 2 போலீஸார் உள்பட 12 பேர் காயம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் கொண்டு வெடிகுண்டுகள் வீசப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஆகையால் கிளர்ச்சியாளர்கள் மீது எதிர்த் தாக்குதலில் ஈடுபட மாநில அரசு காவல்துறை தலைமையகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பிரேன் சிங் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: பொது மக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் ட்ரோன்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை வீசுவது தீவிரவாத செயலாகும். இத்தகைய கோழைத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்பாவி மக்கள் மீது இத்தகைய தாக்குதலில் ஈடுபடுவதை மணிப்பூர் மாநில அரசு மிக தீவிரமாக அணுகும். இதுபோன்ற தீவிரவாத தாக்குதலுக்கு அரசு தக்க பதிலடி கொடுக்கும். அனைத்து விதமான வன்முறைகளை நாம் கைவிடுவோம். வெறுப்பு, பிளவு, பிரிவினைக்கு எதிராக மணிப்பூர் மக்கள் ஒன்றுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x