Published : 03 Sep 2024 05:47 PM
Last Updated : 03 Sep 2024 05:47 PM

டெல்லி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர், நடத்துநர் குறைகளை கேட்டறிந்த ராகுல்!

புதுடெல்லி: டெல்லி போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ளார். இவர்கள் தனியார்மய அச்சத்தில் வாழ்ந்து வருவதாக ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களை அவ்வப்போது சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் டெல்லி போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் கலந்துரையாடிய வீடியோ ஒன்றை ராகுல் நேற்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ராகுல் தனது சமூக ஊடகப் பதிவில், “சமூகப் பாதுகாப்பு இல்லை, நிலையான வருமானம் இல்லை. மிகவும் பொறுப்புள்ள வேலையை செய்ய ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களை போலவே புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ள டிடிசி ஊழியர்கள் தொடர்ந்து தனியார்மய அச்சத்தில் வாழ்கின்றனர். இவர்கள்தான் இந்தியாவை இயக்குகின்றனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் பயணத்தை எளிதாக்குகின்றனர். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்புக்கு அநீதிதான் பலனாக கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை உபேர் டாக்ஸி மூலம் சரோஜினி நகர்பேருந்து பணிமனைக்கு சென்றராகுல், அங்கிருந்த ஓட்டுநர்கள்,நடத்துநர்கள் மற்றும் மார்ஷல்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஊழியர்கள் தங்களுக்கு 8 மணி நேர வேலை என்றாலும் கூடுதலாக 2 மணி நேரம் பணியாற்றுவதாக கூறினர். அவர்கள் மேலும் கூறும்போது, “எங்களில் நிரந்த ஊழியர்கள் யாருமில்லை. எங்களுக்கு நாள் ஒன்றுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான பிடித்தம் சேர்த்து ரூ.813 சம்பளமாக தரப்படுகிறது.

எங்களுக்கு ஓய்வு நாட்கள் தரப்படுவதில்லை, ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் பணியாற்றுகிறோம். நாங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நாட்களில்எங்களுக்கு சம்பளம் தரப்படுவதில்லை’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து சரோஜினி நகர்பணிமனையில் இருந்து மாநகரப்பேருந்தில் ராகுல் காந்தி பயணம்செய்தார். அப்போது பயணிகளுடன் கலந்துரையாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x