Published : 03 Sep 2024 05:31 PM
Last Updated : 03 Sep 2024 05:31 PM

‘காங்கிரஸிலும் பாலியல் சுரண்டல்’ - புகார் கூறிய பெண் பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்    

சிமி ரோஸ் பெல் ஜான் (கோப்புப் படம்)

திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிமி ரோஸ் பெல் ஜான் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குதான் முக்கிய பதவி வழங்கப்படுகிறது. திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கேரள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் போன்ற நிலைதான் காங்கிரஸ் கட்சியிலும் நிலவுகிறது. கண்ணியமான பெண்கள் இந்தக் கட்சியில் பணியாற்ற முடியாது” என தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சிமி ரோஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில தலைவருக்கு கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், அவரை கட்சியிலிருந்து நீக்கி மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து கேரள காங்கிரஸ் தலைவர்கே.சுதாகரன் கூறும்போது, “சிமி ரோஸ் மீது மகளிர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x