Published : 31 Aug 2024 04:56 AM
Last Updated : 31 Aug 2024 04:56 AM

கல்லூரி மாணவிகள் விடுதியில் ரகசிய கேமரா: விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவு

போராட்டம் நடத்திய மாணவிகள்

விஜயவாடா: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், குட்லவல்லேறு பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு தனி விடுதி வசதிஉள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி, தினமும் வகுப்புக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவர் வியாழக்கிழமை நள்ளிரவு குளியல் அறைக்கு சென்றபோது அங்கு மிகச் சிறிய வடிவில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து சக மாணவிகளிடம் தெரிவித்தார். அவர்கள் அந்த கேமராவை கைப்பற்றினர்.

பிறகு அதுகுறித்து விசாரித்ததில் அதே கல்லூரியை சேர்ந்த விஜய் எனும் மாணவர், ஒரு மாணவியின் உதவியுடன் சில குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தினார் என்பதும் அதனை அவர்கள்வெளி ஆட்களுக்கு விற்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சக மாணவிகள் அடித்து உதைத்தனர்.

இது குறித்து விஜயவாடா போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் கொல்லா ரவீந்திரா மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஆகியோரை நேரில் சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x