Published : 31 Aug 2024 05:39 AM
Last Updated : 31 Aug 2024 05:39 AM

குகி இனத்தவருக்கு தனி நிர்வாகத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உறுதி

புதுடெல்லி: மணிப்பூரில் மைத்தேயி இனத்த வருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மணிப்பூரில் குகி மற்றும் மைத்தேயி இனத்தவர் இடையே கடந்தாண்டு மே மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது.

இந்நிலையில் குகி இன பிரதிநிதிகள் டெல்லியில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘குகி இனத்தவருக்கு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும்.

இது மட்டுமே பிரச்சினையில் இருந்து விடுபடும் ஒரே வழி.மைத்தேயி இனத்தைச் சேர்ந்த முதல்வர் பிரேன் சிங், தனது சமுதாயத்தினருக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனால் மணிப்பூர்மக்கள் எப்போதும் இல்லாத அளவில் பிளவுபட்டுள்ளனர்’’ என தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் பிரேன் சிங் கூறியதாவது: மணிப்பூர் கடின உழைப்பாளிகளைக் கொண்ட சிறிய மாநிலம்.எங்கள் முன்னோர்கள் 2,000 ஆண்டுகள் வரலாற்றை கொண்டவர்கள். இந்த மாநிலம் உருவாக அவர்கள் பல தியாகங்களை செய்தனர். அதனால் இந்த மாநிலத்தை பிரிக்கமுடியாது. இங்கு தனி நிர்வாகம் அமைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

குகி இனத்தவர்கள் வாழும் மணிப்பூர் மலைப் பகுதிகளில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்த நான் ஆதரவளிக்கிறேன். மலைப் பிரதேங்களில் வளர்ச்சியில் கவனம் செலுத்த தன்னாட்சி அந்தஸ்து பெற்ற குழுக்கள் உள்ளன. அவற்றின் மூலமாக மலைப் பிரதேசங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதற்காகமத்திய அரசிடம் நான் வேண்டுகோள் விடுப்பேன். மணிப்பூரில் இனப்பிரச்சினையை கையாள்வதில் நான் பாரபட்சமாக செயல்படவில்லை. நான் மைத்தேயி, குகி மற்றும் நாகா இனத்தவர்களுக்கான முதல்வர்.

மணிப்பூர் மற்றும் அதன் மக்களை பாதுகாக்க நான் அனைத்தையும் செய்தேன். மணிப்பூரில் பேச்சுவார்த்தை மற்றும் பாதுகாப்பு படைகள் மூலம் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசை அனுமதித்தேன். மணிப்பூரில், இன்னும் 6 மாதங்களில் அமைதி திரும்பும். இதற்காக மத்திய அரசுடன் இணைந்து முக்கிய பங்காற்றி வருகிறோம்.

இவ்வாறு பிரேன் சிங் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x