Published : 29 Aug 2024 05:38 AM
Last Updated : 29 Aug 2024 05:38 AM

பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் வக்பு வாரிய சொத்து ஆகாது: மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

புர்ஹான்பூர் கோட்டை வளாகத்தில் உள்ள அரண்மனை.

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளபுர்ஹான்பூர் கோட்டை வளாகத்தில் அரண்மனை, ஷா ஷுஜாவின் கல்லறை, நாதிர் ஷாவின் கல்லறை,பிபீ சாஹிம் மசூதி ஆகியவை அமைந்துள்ளன. இவை முஸ்லிம்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை யாவும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் எனஅறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கட்டுப்பாட்டின் கீழ் அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தநினைவுச் சின்னங்கள் அனைத்தும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று மத்திய பிரதேச மாநிலவக்பு வாரியம் அறிவித்தது.

மேலும் அந்த இடத்தை இந்தியதொல்லியல் துறை உடனடியாககாலி செய்து, சொத்துகளை வக்புவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து ஏஎஸ்ஐ ம.பி.உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைதாக்கல் செய்தது. அதில் ஏஎஸ்ஐ தரப்பில் கூறியிருப் பதாவது:

மத்திய பிரதேச மாநிலம் எமகிர்த் கிராமத்தில் புர்ஹான்பூர் கோட்டை,அரண்மனை உள்ளிட்ட இடங்கள் 4.448 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்த இடமானது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக, பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1904-ன் கீழ் 1913, 1925-ம் ஆண்டுகளிலேயே அறிவிக்கப்பட்டு விட்டன. அதன்படி இதை ஏஎஸ்ஐ பாதுகாத்து, பராமரித்து வருகிறது.

தற்போது இந்த இடத்தை காலி செய்யுமாறு மத்திய பிரதேச வக்பு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த இடம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இதைப் பராமரித்து வருகிறோம். எனவே, இதை வக்புவாரியச் சொத்து என்று கூறமுடியாது. எனவே, வக்பு வாரியத்தின்அறிவிக்கையை ரத்து செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வளாகத்தில் அமைந்துள்ள நாதிர் ஷா சமாதி.

அப்போது வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “இந்த இடம் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடம். அந்தஇடத்தை ஏஎஸ்ஐ காலி செய்யுமாறுஉத்தரவிட எங்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் ஏஎஸ்ஐ ஆனது, வக்பு வாரியதீர்ப்பாயத்திடம்தான் முறையிட்டிருக்க வேண்டும். மாறாக, ஏஎஸ்ஐம.பி. உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்துள்ளது. எனவே,ஏஐஎஸ்-யின் கோரிக்கையை நிராகரிக்கவேண்டும்" என்றார்.

விசாரணை முடிந்த நிலையில்நீதிபதி அலுவாலியா தனது தீர்ப்பில்கூறும்போது, “புர்ஹான்பூர் கோட்டை, அரண்மனை உள்ளிட்டஇடங்கள் பாதுகாக்கப்பட்டநினைவு சின்னங்கள் என்று 1913,1925-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன. பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவை ஏஎஸ்ஐ பராமரிப்பில் உள்ளன. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.ஆனால், இது வக்பு வாரியச் சொத்துகள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தாஜ்மஹால், செங்கோட்டை: அப்படியானால் தாஜ்மஹால், டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட இடங்களை வக்பு வாரியச் சொத்துகள் என்று கூறிவிட்டு அதையும் நீங்களே எடுத்துக் கொள்ளலாமே? பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என்று அறிவிக்கப்பட்டு விட்டபின்னர் அவற்றை வக்பு வாரியச்சொத்துகள் என்று சொந்தம் கொண்டாட முடியாது. எனவே, இவற்றை வக்புவாரியச் சொத்துகள் என்றுஅறிவிக்க முடியாது. வக்பு வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x