Published : 25 Aug 2024 07:37 PM
Last Updated : 25 Aug 2024 07:37 PM
சிட்னி: சரக்கு, சேவைகள், டிஜிட்டல் வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இந்திய - ஆஸ்திரேலிய தூதுக்குழுவின் 10-வது சுற்று பேச்சுவார்த்தை சிட்னியில் நடைபெற்றது.
இது தொடர்பாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய - ஆஸ்திரேலிய சி.இ.சி.ஏ பேச்சுவார்த்தைகளின் 10-வது சுற்று ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சிட்னியில் சரக்கு, சேவைகள், டிஜிட்டல் வர்த்தகம், அரசின் கொள்முதல், மூல விதிகள் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நடைபெற்றது. இந்த ஒவ்வொரு துறையிலும் தீவிர விவாதங்கள் நடத்தப்பட்டன, மீதமுள்ள விதிகளில் ஒன்றிணைவதற்கான தெளிவு மற்றும் புரிதலைக் கொண்டு வந்தன.
இந்திய தூதுக்குழுவுக்கு இந்திய அரசின் வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமைத் தாங்கினார். ஆஸ்திரேலிய தூதுக்குழுவிற்கு அதன் டி.எஃப்.ஏ.டியின் முதல் உதவிச் செயலாளர் ரவி கேவல்ராம் தலைமை தாங்கினார். ஒருவருக்கொருவர் முன்மொழிவுகளை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் வேறுபாடுகளைக் குறைப்பதற்கான தீவிர விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை கூட்டத்தில் காண முடிந்தது. ஒரு சீரான முடிவை எட்டுவதற்கு உள்நாட்டு உணர்திறனை மனதில் கொண்டு இரு தரப்பினராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஐந்துத் துறைகள் குறித்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர்களின் கூட்டுக் கூட்டத்திற்குத் தெரிவிக்கப்பட்டன, இது அவர்களின் எதிர்கால பணிகளை வழிநடத்த ஏதுவாக அமைந்தது. ஐந்து துறைகளின் கீழ் ஒருவருக்கொருவர் முன்மொழிவுகளை தெளிவாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையில், இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த சுற்றுக்கு முன்னர் இரு தரப்பிலிருந்தும் மெய்நிகர் முறையில் பேச்சுவார்த்தைக்கான செயல் திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
கூடுதலாக, தலைமை பேச்சுவார்த்தையாளர்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மதிப்பாய்வு செய்தனர். மேலும் 2022, டிச. 29 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா - ஆஸ்திரேலியா இ.சி.டி.ஏ-இன் நேர்மறையான விளைவுகளை உருவாக்குவதன் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் உறுதி எடுக்கப்பட்டது. சி.இ.சி.ஏ பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள பலன்களையும், இரு தரப்பினருக்கும் சமச்சீரான முடிவையும் அளிப்பதை உறுதி செய்ய இரு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆஸ்திரேலியா, இந்தியாவின் முக்கியமான வர்த்தக மற்றும் கேந்திர கூட்டாளியாக இருக்கிறது. இரு நாடுகளும் இந்தோ - பசிபிக் பொருளாதார மன்றம் மற்றும் முத்தரப்பு விநியோகச் சங்கிலி நெகிழ்வு முயற்சி ஆகியவற்றின் பகுதியாக உள்ளன. இது பிராந்தியத்தில் விநியோகச் சங்கிலி நெகிழ்வை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய-ஆஸ்திரேலிய சி.இ.சி.ஏ பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று நவம்பரில் நடைபெற வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment