Published : 24 Aug 2024 01:37 PM
Last Updated : 24 Aug 2024 01:37 PM

பத்லாபூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சரத் பவார் தலைமையில் போராட்டம்

புனே: பத்லாபூரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மூத்த தலைவர் சரத் பவார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இரு சிறுமிகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடமும், பத்லாப்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 17ம் தேதி பத்லாபூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்று போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்த மகாராஷ்டிர அரசு, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. பள்ளிச் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்வத்தை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மகாராஷ்டிர எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் புனேவில் இன்று (ஆக. 24) போராட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் கருப்புத் துணிகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சரத் பவார், "பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. பத்லாபூர் சம்பவத்தை மகாராஷ்டிர அரசு முக்கிய பிரச்சினையாகக் கருத வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக அரசு கூறுகிறது. அரசு எவ்வாறு பொறுப்பற்றத்தனத்துடன் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது" என குறிப்பிட்டார்.

போராட்டத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) மூத்த தலைவர் சுப்ரியா சூலே, “மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. காவல்துறை மீது மக்களுக்கு அச்சம் இல்லை. பத்லாபூர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியாட்கள் என்று சிலர் கூறி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தியர்கள்தான். இதுபோன்ற ஒரு உணர்வில்லாத ஒரு மாநில அரசை நான் பார்த்ததே இல்லை. சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை நாம் போராட்டத்தை நிறுத்தக்கூடாது” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x