Published : 21 Aug 2024 04:18 AM
Last Updated : 21 Aug 2024 04:18 AM

மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: மருத்துவர்கள் பாதுகாப்புக்கு தேசிய குழு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணை நேற்று நடந்தது. உடன் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா. படம்: பிடிஐ

புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் மிக தாமதமாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதற்காக மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க, தேசிய அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம்ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்:

தலைமை நீதிபதி சந்திரசூட்: மருத்துவ தொழில் வன்முறைக்கு ஆளாகிஉள்ளது. குறிப்பாக, பெண் மருத்துவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ தொழிலில் அதிக பெண்கள் சேர்ந்து கொண்டிருக்கும் சூழலில், நிலைமையில் மாற்றம் ஏற்பட மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்காக நாடு காத்திருக்க முடியாது.

மருத்துவமனையில் மிகப் பெரிய குற்ற சம்பவம் நடந்தது குறித்து கடந்த 9-ம் தேதி காலை தகவல் கிடைத்துள்ளது. பெற்றோரிடம் இரவு 8.30 மணி அளவில் தான் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பல மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணி அளவில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தற்கொலை சம்பவமாக தெரிவிக்க மருத்துவ கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார். அதனால்தான், பெண் மருத்துவரின் உடலை அவரது பெற்றோர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்பதுபோல தோன்றுகிறது. கொடூர சம்பவம் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மருத்துவமனைக்குள் வன்முறையை அனுமதித்துள்ளனர்.

மேற்கு வங்க அரசின் சார்பில் மூத்தவழக்கறிஞர் கபில் சிபல்: இது சரியான தகவல் அல்ல. எஃப்ஐஆர் உடனடியாக பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் இது கொலை என தெரியவந்தது. பெண் மருத்துவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் புகைப்படம் எடுத்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் குறித்துவழக்கு விசாரணை உடனடியாக தொடங்கியது. நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை குழு உருவாக்கப்பட்டது.

நீதிபதி பர்திவாலா: எஃப்ஐஆர் பதிவுசெய்யும்படி முதலில் கூறியது யார்?எப்போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது?. வழக்கறிஞர் கபில் சிபல்: உயிரிழந்தமாணவியின் தந்தைதான் போலீஸில் புகார் அளித்தார். இரவு 11.45 மணி அளவில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் புகார் அளித்தார்.

இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் 22-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர். அப்போது, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க முன்னணி மருத்துவர்கள் அடங்கிய தேசிய செயற்குழு (என்டிஎஃப்) ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழுவில் மருத்துவர் வைஸ் அட்மிரல் சரீன், மருத்துவர்கள் டி.நாகேஸ்வர் ரெட்டி, எம் னிவாஸ், பிரதிமா மூர்த்தி, கோவர்தன் தத் பூரி, சவுமித்ரா ராவத், டெல்லி எய்ம்ஸ் இதயவியல் துறை தலைவர் அனிதா சக்சேனா, மும்பை மருத்துவ கல்லூரி டீன் பல்லவி சாப்ரே, எய்ம்ஸ் மூளை நரம்பியல் துறை மருத்துவர் பத்மா வஸ்தவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு இடைக்கால அறிக்கையை 3 வாரங்களிலும், இறுதி அறிக்கையை 2 மாதங்களிலும் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x