Last Updated : 19 Aug, 2024 01:24 PM

1  

Published : 19 Aug 2024 01:24 PM
Last Updated : 19 Aug 2024 01:24 PM

குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை: உ.பி.,யின் ஐபிஎஸ் தமிழர் பி.தினேஷ்குமாருக்கு விருது

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் ஐபிஎஸ் தமிழரான பி.தினேஷ்குமாருக்கு (37) சுதந்திர தின டிஜிபியின் பிளாட்டினம் விருது வழங்கப்பட்டுள்ளது. காஜியாபாத்தின் கூடுதல் காவல் ஆணையரான அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அதிக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் சிறப்பாக பணிபுரியும் காவல்துறையினருக்கு மத்திய அரசால் பல விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பாராட்டு விருதுகள் மாநில அரசுகள் சார்பிலும் வழங்கப்படுகின்றன. இவை, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் வழங்கப்படுகின்றன. உ.பியின் காவல்துறை தலைமை இயக்குநரால் (டிஜிபி) பிளாட்டினம் பாராட்டு விருது தமிழரான ஐபிஎஸ் பி.தினேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.

இதை, காஜியாபாத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அதன் காவல் ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா வழங்கினார். டெல்லியை ஒட்டியுள்ள உ.பியின் காஜியாபாத் கிரிமினல் நடவடிக்கைகள் அதிகம் கொண்டது. கடந்த நவம்பர் 2022 முதல் அதன் கூடுதல் காவல் ஆணையராக உள்ளார் தமிழரான பி.தினேஷ்குமார்.

இங்கு ஏசிபி தினேஷ்குமார் உ.பியிலேயே அதிக எண்ணிக்கையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவரையும் 2024 இன் 8 மாதங்களில் 458 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகினர். கடந்த வருடம் 2023 இல் 512 என இது இருந்துள்ளது. இதன் அடுத்த நிலையில் நொய்டா 89, வாரணாசி 57, ஆக்ரா 17 என்றானது.

இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் ஐபிஎஸ் அதிகாரியான பி.தினேஷ்குமார் கூறும்போது, ''நற்பணிக்காக கிடைத்த இந்த விருதிற்கு முக்கிய காரணம் எனது காவல்துறை குழுவினரின் ஆதரவு. எனவே, இந்த மூன்றாவது விருதை காஜியாபாத் காவல்துறையினக்கு சமர்ப்பிக்கிறேன். தமிழர்கள் தேசிய அளவிலும், சர்வதேசங்களில் சாதனைகள் புரிந்து தமிழ்நாட்டின் புகழைப் பரப்ப வேண்டும் என்பதும் எனது விருப்பம்.'' எனத் தெரிவித்தார்.

மேட்டூரிலுள்ள கொளத்தூரின் சின்னதண்டா கிராமத்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தினேஷ்குமார். கோவையின் அரசு வேளாண் பல்கலைகழகத்தில் 2008 இல் இளநிலை பட்டம் பெற்றவர். குடிமைப்பணி தேர்வு எழுதியவர், 2009 இல் முதல்முயற்சியிலேயே ஐபிஎஸ் பெற்று உபி பிரிவில் இணைந்தார். காஜியாபாத்தில் 2 கொலையாளிகள், ஒரு கொள்ளைக்காரனையும் இந்த ஏசிபி என்கவுண்டர் செய்துள்ளார்.

இதற்குமுன் அவருக்கு 2019 இல் உ.பி மாநில வெள்ளிப்பதக்கப் பாராட்டு விருதுபெற்றார். இது, உபியின் ஷாம்லியின் எஸ்எஸ்பி பணியில் துப்பாக்கி சண்டையிட்டு பஞ்சாபின் காலிஸ்தான் தீவிரவாதிகளை உயிருடன் பிடித்தமைக்கு கிடைத்தது. அடுத்து சஹரான்பூர் எஸ்எஸ்பியானபோது, அங்கு பாஜகவின் 2 நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலையாகி உ.பியின் பல மாவட்டங்களில் மதக்கலவரச் சூழல் உருவானது.

குடும்பத் தகராறால் நடந்த சம்பவம் எனக் கண்டறிந்து உண்மைக் கொலையாளிகளை கைது செய்தார். இதனால் உபியின் ஒரு பகுதியில் ஏற்படவிருந்த மதக்கவலரம் தடுத்து நிறுத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தில் கலவரமும், போலீஸாரிடையே மோதலும் ஏற்பட்டது. மாநிலம் முழுவதிலும் சுமார் 20 பேர் பலியாக, சஹரான்பூரில் மட்டும் தடியடியும் இன்றி அமைதியாக நடைபெற்றது.

இதற்காக இந்து-முஸ்லிம் உள்ளிட்ட அமைப்புகளுடன் பேசி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தார் அதிகாரி தினேஷ்குமார். இதுபோன்ற காரணங்களுக்காக, உ.பி அரசு 2020 இல் அவருக்கு தங்கப்பதக்கம் அளித்தது. ஏசிபி தினேஷை போல், குடிமைப்பணியில் வென்ற தமிழர்களில் சுமார் 35 அதிகாரிகள் உ.பி மாநிலப் பிரிவில் பணியாற்றுகின்றனர். இவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x