Published : 18 Aug 2024 06:57 PM
Last Updated : 18 Aug 2024 06:57 PM

பெண் மருத்துவர் கொலை வழக்கு: தானாக முன்வந்து விசாரிக்கிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு

புதுடெல்லி: கொல்கத்தா அரசு மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை (ஆக.20) விசாரணை செய்கிறது.

ஏற்கெனவே இந்த வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. கடந்த வார விசாரணையின் போது, காவல்துறைக்கு மாநில அரசு வழங்கிய காலக்கெடு முடிவதற்கு முன்பாக, வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதி கோரி மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

படுகொலை நடந்த மறுநாள், சஞ்சய் ராய் என்ற காவல்துறையுடன் தொடர்புடையை தன்னார்வலர் ஒருவரை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர். அவர் தான் இந்த வழக்கில் முதன்மையான சந்தேக நபர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் போலீஸாரின் விசாரணையில் குறைபாடு இருப்பதாக கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மருத்துவர்கள் நள்ளிரவு போராட்டம் நடத்தினர். அப்போது கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அந்தக் கும்பல் மருத்துவமனையின் அவசர சிகிச்சைத் துறையையும் தாக்கி சேதப்படுத்தியது.

என்றாலும், கருத்தரங்கு அறை அப்படியே இருப்பதாகவும் கும்பலால் அந்த அறை தாக்கப்படவில்லை என்றும் கொல்கத்தா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொல்கத்தா அரசு மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை (ஆக.20) விசாரணை செய்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x