Published : 18 Aug 2024 05:31 AM
Last Updated : 18 Aug 2024 05:31 AM

கேதார்நாத் மலைப்பாதை 15 நாட்களுக்கு பிறகு திறப்பு

டேராடூன்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் மலையேற்றப் பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து 15 நாட்களுக்குப் பிறகு பக்தர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்லும் சார்தாம் யாத்திரை கடந்த மே மாதம் தொடங்கியது.

29 இடங்களில் நிலச்சரிவு: இந்நிலையில் கடந்த ஜூலை 31-ம் தேதி பெய்த கனமழை காரணமாக கேதார்நாத் செல்லும் மலையேற்றப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் 19 கி.மீ. தூரமுள்ள இப்பாதையில் 29 இடங்களில் நிலச்சரிவு இடிபாடுகள் அகற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை இப்பாதை மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சீரமைப்பு பணியில் சுமார் 260 தொழிலாளர்கள் இரவு-பகலாக ஈடுபட்டனர். இப்பாதையில் ஒரு சில இடங்களில் மட்டும் சாலையை கடக்க பக்தர்களுக்கு பாதுகாப்பு படையினர் உதவி வருகின்றனர்” என்றும் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூலை 31-ம் தேதி கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் பாதையில் சிக்கிக் கொண்டனர். இந்திய விமானப் படை மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களை மாநில மற்றும் தேசிய பேரிடர் படையினர் மற்றும் போலீஸார் மீட்டனர். இந்த மீட்புப் பணி ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்தது.

ருத்ரபிரயாகை மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பலமுறை சென்று, இந்த மீட்புப் பணிகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x