Published : 17 Aug 2024 10:02 AM
Last Updated : 17 Aug 2024 10:02 AM

உ.பி.யில் கான்பூர் - சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 20+ பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட மர்மப் பொருளால் வாரணாசி - சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் (19168) 22 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் வாரணாசி - சபர்மதி இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பீம்சேன் எனுமிடத்தில் தடம்புரண்டது. அதிகாலை வேளையில் ரயில் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று ரயில்வே உயரதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்த விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கான்பூர் - மும்பை இடையேயான ரயில் போக்குவரத்துக்கு இதுவே முக்கிய தடம் என்பதால் அப்பகுதியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள் மீது மோதியுள்ளது. தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. உளவுத் துறையும், உ.பி. போலீஸாரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.” என்று பதிவிட்டுள்ளார்.

7 ரயில்கள் ரத்து: இந்த விபத்தால் 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ரயில்கள் வேறு மார்க்கத்தில் செல்லும்படி திருப்பிவிடப்பட்டுள்ளன. இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிய வீராங்கனா லக்‌ஷ்மிபாய் ஜான்சி ரயில்வே சந்திப்பு நிலையத்தை 0510-2440787 அல்லது 0510-2440790 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராய் ரயில் நிலையத்தை 05162-252206 என்ற எண்ணிலும், பாண்டா ரயில் நிலையத்தை 05192-227543 என்ற எண்ணிலும், லலித்பூர் சந்திப்பை 07897992404 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x