Published : 17 Aug 2024 08:54 AM
Last Updated : 17 Aug 2024 08:54 AM

பெண் மருத்துவர் கொலை: தொடங்கியது நாடு தழுவிய மருத்துவர்கள் வேலைநிறுத்தம் - ஐஎம்ஏ-வின் 5 கோரிக்கைகள் என்ன?

புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று (ஆக.17, சனிக்கிழமை) காலை முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவ சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்த இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) 5 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

ஐஎம்ஏவின் 5 கோரிக்கைகள் என்ன? 1. உறைவிட மருத்துவர்களின் ( ரெசிடென்ட் டாக்டர்) பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

2. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டங்கள் களத்தில் பெரும்பாலும் பயனவற்றவையாகவே இருக்கின்றன. அவற்றால் குற்றங்களைத் தடுக்க இயலவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதா 2019 மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

3. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்ஜி கர் மருத்துவமனையை சூறையாடியவர்கள் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

4. விமான நிலையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். அதேபோல் குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகள் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு கட்டாய பாதுகாப்புக்கான உரிமை உண்டு.

5. குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கண்ணியமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடந்தது என்ன? மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்தமுதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அழைப்பு விடுத்தது. அதன்படி போராட்டம் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x