Published : 13 Aug 2024 11:48 AM
Last Updated : 13 Aug 2024 11:48 AM

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு: சக மருத்துவர்கள் 4 பேருக்கு போலீஸ் சம்மன்

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக இளநிலை மருத்துவர்கள் நால்வரை கொல்கத்தா போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீஸார் விசாரணையை நாளைக்குள் முடிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர். ஏற்கெனவே, முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொலை குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் மருத்துவர்கள் அதேநேரம், கொல்கத்தா காவல்துறை கொலை வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் (நாளைக்குள்) முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்துள்ளனர். மருத்துவர்களோடு பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் ஆளும் திரிணமூல் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் மேற்குவங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

ஜூனியர் மருத்துவர்களிடம் விசாரணை: இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக ஜூனியர் மருத்துவர்கள் நால்வரை கொல்கத்தா போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கொலை சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். இந்த நால்வரை தான் தற்போது போலீஸார் விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளனர்.

அந்த நான்கு மருத்துவர்களும் சென்றபிறகு பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் என்பவர், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், மருத்துவக் கல்லூரி தலைமைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் உட்பட அனைவருக்கும் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

கொலை பின்னணி: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவக் கல்லூரியில் 250 எம்பிபிஎஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.

இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (28) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்கச் சென்றார். கடந்த 9-ம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x