Published : 12 Aug 2024 05:47 PM
Last Updated : 12 Aug 2024 05:47 PM

“பங்குச் சந்தையை பலவீனப்படுத்த காங்கிரஸ் சதி!” - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பாஜக காட்டம்

புதுடெல்லி: செபி அமைப்பின் தலைவருக்கு எதிராக ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ள பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி மொத்த பங்குச் சந்தையையும் பலவீனப்படுத்த விரும்புகிறது. விரைவில் காங்கிரஸை பாஜக அம்பலப்படுத்தும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் வகையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இந்தியப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதையும், இந்தியாவுக்கு வரும் முதலீடுகளை தடுப்பதையும் நோக்கமாக கொண்ட ஏமாற்று வேலை தான் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு.

செபி தலைவர் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என்பது ஒரு சதி. ஹிண்டன்பர்க் அறிக்கையை மக்கள் மறுத்த நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் டூல்கிட் கும்பலுடன் இணைந்து நாட்டில் பொருளாதார ஸ்திரமின்மையை ஏற்படுத்தவேண்டும் என்று சதி செய்து வருகின்றனர். 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பல ஊழல்கள் நடந்தன. அப்போது எல்லாம், இதுபோன்ற அறிக்கைகள் ஏன் வெளியாகவில்லை. ஹிண்டன்பர்க் வெளியிட்ட கற்பனை அறிக்கையின் அடிப்படையில் நாட்டில் பொருளாதார ஸ்திரமின்மையை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சியின் தலைமை ஈடுபட்டுள்ளது. ஆனால், முதலீட்டாளர்கள் இந்த சதியை உணர்ந்துள்ளனர்.

உலகளவில் இந்திய பங்குச்சந்தை பாதுகாப்பான, நம்பிக்கைக்குரிய சந்தையாகக் காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் முதலீட்டுச் சூழல் பாதுகாப்பானது அல்ல என்ற தோற்றத்தை உலக நாடுகள் மத்தியில் காங்கிரஸ் கட்சி முன்னிறுத்த விரும்புகிறது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புவைத்து இந்திய பொருளாதாரத்தை சிதைக்கின்றது.

கோடிக்கணக்கான சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ள இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. இந்திய பங்குச்சந்தை நிலைகுலைந்தால், சிறு முதலீட்டாளர்கள் சிரமப்படுவார்களா இல்லையா? இந்திய பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் நிறைய பணம் போட்டுள்ளனர். காங்கிரஸ் ஏன் அவர்களுக்கு தீங்கு செய்ய விரும்புகிறது என்பது புரியவில்லை. காங்கிரஸ் கட்சி மொத்த பங்குச் சந்தையையும் பலவீனப்படுத்த விரும்புகிறது. விரைவில் காங்கிரஸை பாஜக அம்பலப்படுத்தும்.

மத்திய அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதை ராகுல் காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். ராகுல் காந்தியும், அவரது டூல்கிட் நண்பர்களும் பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்பில் இதனை செய்கின்றனர். ஹிண்டன்பர்க் கடந்த முறை வெளியிட்ட அறிக்கைக்காக அந்நிறுவனத்துக்கு செபி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை ஹிண்டன்பர்க் விசாரணைக்கு வரவில்லை. அந்த நோட்டீஸுக்கு எதிராக தற்போது செபி தலைவரை குறிவைத்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க்கில் யார் முதலீடு செய்துள்ளார்? இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் இந்த ஜார்ஜ் சோரோஸ் தான் ஹிண்டன்பர்க்கின் முக்கிய முதலீட்டாளர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் பெயர் பெற்றவர் இந்த ஜார்ஜ் சோரோஸ்" என்று அவர் தெரிவித்தார்.

குற்றச்சாட்டு என்ன? - ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்தனர். குறிப்பாக, மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர். இதன் காரணமாக, அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செபியின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்’ என்று அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமமும், செபியின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், ‘ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை, அதானிக்கும் மோடிக்குமான நெருங்கிய தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில், தற்போது அதானி குழுமத்துக்கும், செபி தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து புதிய குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ளது. இந்தியாவின் நடுத்தர மக்கள் தங்கள் கடின உழைப்பு மூலம் ஈட்டிய பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். தங்களை செபி பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், தற்போது செபியின் தலைவர் மீது மாபெரும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்படுவது அவசியம்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x