Published : 11 Aug 2024 06:13 AM
Last Updated : 11 Aug 2024 06:13 AM

எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் வசதியானவர்களை நீக்கும் உச்ச நீதிமன்ற பரிந்துரையை நிராகரித்தது அமைச்சரவை

கோப்புப்படம்

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் கிரீமி லேயரை (வசதியானவர்களை) அடையாளம் கண்டு நீக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை நிராகரித்துள்ளது.

பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு அளித்தது செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 1-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் போது நீதிபதி பி.ஆர்.கவாய் கூறுகையில், ‘‘எஸ்சி, எஸ்டி பிரிவினரில் வசதியாக இருப்பவர்களை அடையாளம் கண்டு நீக்க அரசு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். அப்போதுதான், அரசியல் சாசனப்படி உண்மையான சமத்துவத்தை அடைய முடியும்’’ என்றார்.

நீதிபதி பங்கஜ் மித்தல் கூறுகையில், ‘‘இட ஒதுக்கீட்டின் பலன் முதல் தலைமுறையினருக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஒரு தலைமுறை இடஒதுக்கீட்டால் பயன் அடைந்து விட்டால், அடுத்த தலைமுறையும் இடஒதுக்கீட்டு பலனை அனுபவிப்பதில் நியாயம் இல்லை’’ என்றார்.

மற்ற நீதிபதிகளும் இதேபோன்ற கருத்தை தெரிவித்தனர். எஸ்சி, எஸ்டி பிரிவினரில் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு பலனை அனுபவித்து வசதியாக இருப்பவர்களை நீக்கினால்தான், அந்த இடஒதுக்கீடு உண்மையிலேயே பின்தங்கியுள்ளவர்களுக்கு பயன்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த பரிந்துரையை அமல்படுத்தக் கூடாது என பாஜக.,வின் எஸ்சி, எஸ்டி எம்.பி.க்கள் குழு மற்றும் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, சர்பானந்த சோனோவால், அர்ஜூன் ராம் மேக்வால், கமலேஷ் பாஸ்வான், வீரேந்திர குமார் உட்பட 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினர்.

அப்போது அவர்களிடம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பரிந்துரைதான். எம்.பி.க்கள் தெரிவித்த கவலை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் விடுத்த தகவலில்,‘‘எஸ்சி, எஸ்டி எம்.பி.க்கள் குழுவைசந்தித்தேன். எஸ்சி, எஸ்டி பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாட்டில் எங்களின் உறுதிப்பாட்டை தெரிவித்தோம்’’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்றுமுன்தினம் ஆலோசித்த மத்திய அமைச்சரவை, எஸ்சி,எஸ்.டி இடஒதுக்கீட்டில் வசதியானவர்களை கண்டறிந்து நீக்கும் பரிந்துரையை நிராகரித்தது. அவ்வாறு செய்தால் அது அரசியல்சாசனத்துக்கு எதிராக இருக்கும் எனகருத்து தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல்சாசனத்தில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் வசதியானவர்களை நீக்க வேண்டும் என தெரிவிக் கப்படவில்லை என்று மத்திய அமைச்சரவை கூறியது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் வசதியானவர்களை நீக்க வேண்டுமென தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x