Published : 09 Aug 2024 04:36 PM
Last Updated : 09 Aug 2024 04:36 PM

சிறுபான்மையினர் பாதுகாப்பு: இந்திய - வங்கதேச எல்லை நிலவர கண்காணிப்புக்கு குழு அமைத்தது மத்திய அரசு!

புதுடெல்லி: இந்திய - வங்கதேச எல்லையில் தற்போதைய நிலவரத்தை கண்காணிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்திய - வங்கதேச எல்லையில் (Indo - Bangladesh Border) தற்போதைய நிலைமையை கண்காணிக்க மோடி அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்கள், இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்நாட்டில் உள்ள தங்களுக்கு இணையான அதிகாரிகளுடன் இந்தக் குழு தொடர்புகளை மேற்கொள்ளும். இந்தக் குழுவுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் கிழக்கு மண்டல ஏடிஜி (ADG) தலைமை தாங்குவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 பேர் கொண்ட இந்தக் குழுவின் பிற உறுப்பினர்களாக ஐஜி (IG), பிஎஸ்எஃப் (BSF) எல்லைப்புற தலைமையகம் - தெற்கு வங்கம், ஐஜி (IG), பிஎஸ்எஃப் (BSF) எல்லைப்புற தலைமையகம் - திரிபுரா, உறுப்பினர் (திட்டம் மற்றும் மேம்பாடு) மற்றும் செயலாளர், எல்பிஏஐ (LPAI) ஆகியோர் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்து தஞ்சம் அடைந்ததை அடுத்து, அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள சிறைகளில் இருந்து பயங்கரவாதிகள் உட்பட 1,200 கைதிகள் தப்பியோடி, இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்யலாம் என்று எல்லைப் பாதுகாப்புப் படைக்கு பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

4,096 கிமீ நீளமுள்ள இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இரவு நேரங்களில் எல்லைப் பகுதிகளில் தேவையற்ற நடமாட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று எல்லைப் பாதுகாப்புப் படை கேட்டுக் கொண்டுள்ளது. எல்லையில் உள்ள கடைகளை இரவு 9 மணிக்குள் மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பாக அரசு கண்காணித்து வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றதை அடுத்து முகம்மது யூனுஸ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், "புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள பேராசிரியர் முகம்மது யூனுஸுக்கு எனது நல்வாழ்த்துகள். பாதுகாப்பை உறுதிசெய்து, இயல்பு நிலை விரைவில் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும், இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என நம்புகிறோம். அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நமது இரு நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x