Published : 03 Aug 2024 06:14 PM
Last Updated : 03 Aug 2024 06:14 PM

வயநாடு துயரம்: இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள், 206 பேரை காணவில்லை - பினராயி விஜயன் விளக்கம்

வயநாட்டின் சூரமலா பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், "இதுவரை 215 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள். இதுவரை 148 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேர் காணவில்லை. 81 பேர் காயமடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் தெரியாத உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் பணியை பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும்.

தீயணைப்புப் படை, தேசிய பேரிடம் மீட்புப் படை, வனத் துறை, காவல் துறை, ராணுவம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் என 1,419 பணியாளர்களை உள்ளடக்கிய தேடுதல் குழுவினர், பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மனித மீட்பு ரேடார் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான ரேடார் போன்ற மேம்பட்ட கருவிகள் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

சூரல்மாலாவில் 866 போலீஸ் அதிகாரிகள் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். தன்னார்வலர்களுடன் இணைந்து தற்காலிக பாலம் மூலம் சுமார் 1,000 பேரை மீட்டதில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். உரலுங்கல் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம், ஹெலிபேடுகளை அமைப்பது மற்றும் உணவு வழங்குவது ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு பாதுகாப்பான பகுதி கண்டறியப்பட்டு அங்கு நகரமைப்பு உருவாக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில கல்வி அமைச்சர் பார்வையிட்டு, குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்.

முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (Chief Minister's Distress Relief Fund) நன்கொடை வழங்குமாறு வைத்த வேண்டுகோளுக்கு சர்வதேச சமூகம் சாதகமாக பதிலளித்துள்ளது. நன்கொடைகளை CMDRF-க்கு பல்வேறு முறைகள் மூலம் ஆன்லைனில் வழங்கலாம். நன்கொடை வழங்கியதற்கான ரசீதுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். தவறுகள் ஏற்படுவதைத் தடுக்க UPI பரிவர்த்தனைகளுக்கான QR குறியீடு அமைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மறுவாழ்வு செயல்முறையின் ஒரு பகுதியாக நிலம் வழங்குவதற்கும் வீடுகள் கட்டுவதற்கும் சர்வதேச சமூகத்தின் பல்வேறு உதவிகளை ஒருங்கிணைக்க மாநில அரசு 'வயநாடுக்கு உதவுவதற்கான செல்' ஒன்றை உருவாக்கியுள்ளது. இணை நில வருவாய் ஆணையர் கீதா ஐஏஎஸ் உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிக்கு தலைவராக இருப்பார்.

நன்கொடையாளர்களின் தொடர்புக்காக ஒரு மின்னஞ்சல் முகவரியும் (helpforwayanad@kerala.gov.in) பிரத்யேக தொலைபேசி எண்களுடன் (9188940013, 9188940014, 9188940015) அழைப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றத்தால் எழும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. கோட்டயத்தில் காலநிலை மாற்ற ஆய்வுகளுக்கான நிறுவனம் நிறுவப்பட உள்ளது. இந்நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x