Published : 03 Aug 2024 01:34 PM
Last Updated : 03 Aug 2024 01:34 PM

வயநாடு நிலச்சரிவு பலி 340-ஐ கடந்தது: மீட்புப் பணிகளை ராணுவ சீருடையில் ஆய்வு செய்த நடிகர் மோகன்லால்

வயநாடு நிலச்சரிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஐந்தாவது நாளாக இன்று (சனிக்கிழமை) மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் ராணுவத்தில் கவுரவ லெஃப்டினண்ட் கர்னல் பதவியில் உள்ள நடிகர் மோகன்லால் சீருடையில் வந்து ஆய்வு செய்தார்.

கேராவின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை இரண்டு பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்து மண்ணோடு மண்ணாக மாய்ந்தனர்.

நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் தொலைபேசி ‘ஜிபிஎஸ் சிக்னல்’ வாயிலாக அவா்களின் கடைசி இருப்பிடத்தைக் கண்டறிந்து, மோப்ப நாய்களுடன் மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்தப் பணத்தில் ரூ.1 லட்சத்தை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதேபோல் அவரது மனைவி கமலா ரூ.33,000 வழங்கியுள்ளார்.

நடிகர் மோகன்லால் ஆய்வு: இந்நிலையில், வயநாடு அருகே முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார். ராணுவத்தில் கவுரவ லெஃப்டினண்ட் கர்னல் பதவியில் உள்ள நடிகர் மோகன்லால் ராணுவ சீருடையில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப் பணிகள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதையடுத்து, நடிகர் மோகன்லால் தனது விஸ்வசாந்தி ஃபவுண்டேஷன் மூலம் வயநாடு மீட்புப் பணிகளுக்காக ரூ.3 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், “நிலச்சரிவினால் வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பை நேரில் கண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்பு மற்றும் பிற அமைப்புகள், உள்ளூர்வாசிகள் என அனைவரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்” என்றார்.

இதற்கிடையில் 341 பிரேத பரிசோதனைகள் முடிந்துள்ளதாகவும், அதில் 146 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் குழு ஒன்று வியாழனன்று 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடித்தது. இதன்மூலம், கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல வசதியாக, தேடுதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

நிவாரண முகாம்: மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2,597 பேர் தங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 91 முகாம்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பேரிடரின் பின்விளைவுகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்காக மனநலப் பேரிடர் மேலாண்மைக் குழுவை மாநில அரசு உருவாக்கியுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ கூறும்போது, “பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. இப்போது உடல்களைத் தேடும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறோம். எனினும், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தேடி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x