Published : 02 Aug 2024 10:32 AM
Last Updated : 02 Aug 2024 10:32 AM

வயநாடு நிலச்சரிவு பலி 326 ஆக உயர்வு: உயிர் பிழைத்தோரை தேடும் பணியில் ட்ரோன்கள்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உயிர் பிழைத்தோர் எங்கேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பெருமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் மூடப்பட்டுள்ளது.

4வது நாளாக மீட்புப் பணி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவற்படை, இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ளூர்வாசிகள் மூவர், வனத்துறை ஊழியர் ஒருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 326 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலியாற்றில் மட்டும் 172 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 298 பேரை காணவில்லை என்ற புகார்கள் பதிவாகியுள்ளன. சாலியாற்றுப் பகுதியில் சடலங்களைத் தேடுதல் பணிகள் தொடர்கிறது. இதற்கிடையில் நிலச்சரிவு பகுதிகளில் இன்னும் யாரேனும் பொதுமக்கள் உயிருடன் சிக்கியிருக்கிறார்கள என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் குறித்து கேரள சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அஜித் குமார் அளித்த ஊடகப் பேட்டியில், “4 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவம், என்டிஆர்எஃப், உள்ளூர் போலீஸ், சிறப்புக் குழுக்கள், தீயணைப்புத் துறை, கடலோர காவற்படை, கடற்படை என கூட்டுக்குழுவாக இணைந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 200க்கும் அதிகமான உடல்களையும், உடல் பாகங்களையும் மீட்டுள்ளோம். வருவாய்த் துறையினர் இப்பகுதியில் எத்தனை பேர் வசித்துவந்தனர். எத்தனை பேரை இப்போது காணவில்லை போன்ற தகவல்கள் தெரியவரும்” என்றார்.

இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்கள் வயநாடு மற்றும் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x