Published : 31 Jul 2024 12:12 PM
Last Updated : 31 Jul 2024 12:12 PM

யுபிஎஸ்சி இயக்குநராக முன்னாள் மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சுதன் நியமனம்

புதுடெல்லி: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) இயக்குநராக முன்னாள் மத்திய சுகாதார செயலர் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சுதன், அரசியலமைப்பின் 316 ஏ பிரிவின் கீழ் ஆகஸ்ட் 1 ஆம் தேதி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யுபிஎஸ்சி) தலைவராக பொறுப்பேற்பார் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரீத்தி சுதன் தற்போது யுபிஎஸ்சி-ன் உறுப்பினராக உள்ளார். யுபிஎஸ்சி-ன் இயக்குநரான மனோஜ் சோனி, சில நாட்களுக்கு முன்பு ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய இயக்குநராக பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரீத்தி சுதன் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அதாவது அவர் 65 வயதை அடையும் வரை பதவியில் இருப்பார்.

பிரீத்தி சுதன் ஆந்திரப் பிரதேச கேடரைச் சேர்ந்த 1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. அரசாங்க நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் கிட்டத்தட்ட 37 வருட அனுபவம் கொண்டவர். அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றவர். வாஷிங்டனில் பொது நிதி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றவர். பிரீத்தி சுதன், மத்திய சுகாதார செயலாளராக ஜூலை 2020 வரை மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இதற்கு முன்பு பிரீத்தி சுதன் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளராக இருந்துள்ளார்.

யுபிஎஸ்சி முந்தைய தலைவர் மனோஜ் சோனியின் பதவிக்காலம் 2029 இல் முடிவடைவதாக இருந்தது. எனினும், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2017 இல் யுபிஎஸ்சி-ல் உறுப்பினராகச் சேர்ந்த மனோஜ் சோனி, மே 16, 2023 அன்று தலைவராகப் பதவியேற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x