Published : 30 Jul 2024 06:23 AM
Last Updated : 30 Jul 2024 06:23 AM

3 மாணவர்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த விவகாரம்: டெல்லியில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

புதுடெல்லி: டெல்லி பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக இப்பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது.

இந்த தரை தளம் நூலகமாக செயல்பட்டு வந்துள்ளது. இதன் உள்ளே செல்லவும் வெளியேறவும் ஒரே வழி மட்டுமே இருந்துள்ளது. மேலும் மாணவர்களை விரல்ரேகைப் பதிவு மூலம் அனுமதிக்கும் பயோமெட்ரிக் முறை செயல்பாட்டில் இருந்துள்ளது.

இந்நிலையில் திடீர் வெள்ளத்தில் பயோமெட்ரிக் முறை பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால்சுமார் 20 மாணவர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் 17 பேர் மட்டுமே உரிய நேரத்தில் மீட்கப்பட்டனர்.

தெலங்கானாவை சேர்ந்த தன்யா சோனி, உ.பி.யை சேர்ந்த ஷ்ரேயா யாதவ், கேரளாவை சேர்ந்த நவீன் டால்வின் ஆகிய 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயிற்சி மையத்தின் தரை தளத்தில் சேமிப்பகம் மற்றும் வாகனநிறுத்துமிடத்துக்கு மட்டுமே மாநக ராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிகளை மீறி அங்கு நூலகம் செயல்பட்டு வந்துள்ளது.

மேலும் இப்பகுதியில் வடிகால்களை அடைத்துக்கொண்டிருந்த ஆக்கிரமிப்புகளே மழைநீர் தேங்க காரணமாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

புல்டோசர் நடவடிக்கை: இந்நிலையில் ராஜேந்திர நகர் பகுதியில் மழைநீர் தேங்குவதற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று புல்டோசர் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர். மேலும் வடிகால்களுக்கு மழைநீர் செல்லவிடாமல் தடுக்கும் சிமென்ட் தளங்களை துளையிட்டு அகற்றினர். என்றாலும் இந்த நடவடிக்கை போதுமானதல்ல, இது மிகவும் தாமதமான மற்றும் கண் துடைப்பு நடவடிக்கை என நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

13 மையங்களுக்கு சீல்: இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டுமான விதிமீறல் தொடர்பான 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. மேலும் அப்பகுதி இளநிலைப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளரை இடைநீக்கம் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் யாரேனும் அலட்சியமாக இருந்துள்ளனரா என்பதை கண்டறிய மேயர் ஷெல்லிஓபராய் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் கடந்த சனிக் கிழமை மாலை பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சிக்கிய மாணவர்கள் மனதை உருக்கும் வீடியோக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த வீடியோக்களில் வாகனங்கள் தத்தளிக்கும் சாலையில் மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் செல்வதை காண முடிகிறது. பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர்பெருக்கெடுத்து வரும் வீடியோ ஒன்றை அங்கு சிக்கிய மாணவர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில், “பயிற்சி மையத்தின் அடித்தளம் வெறும் 10 நிமிடங்களில் நிறைந்து விட்டது. அப்போது மாலை 6.40 மணி இருக்கும். நாங்கள் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை உதவிக்கு அழைத்தோம். அவர்கள் இரவு 9 மணிக்கு பிறகே வந்தனர். அதற்குள் எங்களின் 3 சகாக்கள் இறந்து விட்டனர். 3 பேர் மருத்துவ சிகிக்சையில் உள்ளனர். அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x