Published : 28 Jul 2024 06:39 AM
Last Updated : 28 Jul 2024 06:39 AM

சமூக வலைதளங்களில் அதிக `லைக்’ பெறுவதற்காக ரயிலில் சாகசம் செய்த இளைஞரின் ஒரு கை, கால் துண்டானது

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் வடாலாவிலுள்ள அன்டாப் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஹத் ஷேக். இவர் ஓடும் ரயில்களில் கம்பியைப் பிடித்தபடி பிளாட்பார்மில் கால்கள் தேய்த்தபடி சறுக்கிச் சென்று சாகசத்தில் ஈடுபடுவார்.

இதை வீடியோவாக எடுத்து, லைக்குகள் பெறுவதற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவார். இந்நிலையில், இவர் மீது, ரயில்வே பாதுகாப்பு போலீஸார் (ஆர்பிஎப்) வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கண்டுபிடித்து அவரது இருப்பிடத்துக்குச் சென்றபோது விபத்தில் அவர் ஒரு கை, காலை இழந்தது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

மஸ்ஜித் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம், சாகசம் செய்தபோது அவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தது அப்போதுதான் ஆர்பிஎப் போலீஸாருக்குத் தெரியவந்தது.

அவரை ரயில்வே ஊழியர்கள்மீட்டு செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது பலமாக அடிபட்டிருந்ததால் அவரது ஒரு கால், கையை மருத்துவர்கள் வெட்டி எடுக்க வேண்டியிருந்தது என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே(சிஆர்) தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா கூறும்போது, “இதுபோன்று அபாயகரமான வகையில் ரயில்களில் சாகசம் செய்யும் இளைஞர்களுக்கு ரயில்வே நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுக்கிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று சாகசம் செய்பவர்கள் குறித்து 9004410735 என்ற செல்போன் எண்ணிலும், 139 என்ற ரயில்வே ஹெல்ப்லைனிலும் புகார் கொடுக்கலாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x