Published : 26 Jul 2024 11:49 AM
Last Updated : 26 Jul 2024 11:49 AM

கோவா - கர்நாடகா எல்லையில் நிலச்சரிவு; மரங்கள் சரிந்து விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதிநிதித்துவப்படம்

பனாஜி: கோவா - கர்நாடகா எல்லைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு துத்சாகர் மற்றும் சோனாலிம் பகுதிகளுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஐந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

லோண்டா மற்றும் டினைகாட் (கர்நாடகா எல்லைக்கு அருகில்) இடைப்பட்ட பகுதியில் மரங்கள் சரிந்து மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டதால் ரயில் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தென்மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி, டாக்டர் மஞ்சுநாத் கனமதி கூறுகையில், "இரண்டு சம்பவங்களும் வெள்ளிக்கிழமை அதிகாலை பதிவாகியுள்ளன. விழுந்த மரங்களை அகற்றிய பின்னர் காலை 6 மணிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இரவு 1 மணிக்கு சோனலிம் நிலையத்துக்கு வந்த வண்டி எண் 17310 வாஸ்கோடகாமா - யஸ்வந்த்பூர் விரைவு ரயில், குலேம் நிலையத்துக்கு (கோவா) திருப்பிவிடப்பட்டது. இதனிடையே, வண்டி எண் 17419 வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரயில், அதிகாலை 1.40 முதல் லோண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டது.

வண்டி எண் 17309 வாஸ்கோடகாமா விரைவு ரயில் அல்நாவர் (கர்நாடகா) நிலையத்தில் காலை 1.55 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், வண்டி எண் 12780 கோவா விரைவு வண்டி பெலாகவியில் (கர்நாடகா) இருந்து அதிகாலை 1.35 மணிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வாஸ்கோ - ஜசிதிக் விரைவு ரயில் வாஸ்கோவில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும்படி நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டதுடன் வண்டி எண் 17419, லோண்டாவில் இருந்து காலை 6 மணிக்கும், வண்டி எண் 17309 அல்நாவரில் இருந்து 6.05 மணிக்கும் புறப்பட்டுச் சென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x