Last Updated : 24 Jul, 2024 05:40 PM

1  

Published : 24 Jul 2024 05:40 PM
Last Updated : 24 Jul 2024 05:40 PM

“உங்களில் ஒருவராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்” - விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: இண்டியா கூட்டணி தலைவர்களுடன் பேசி விவசாயிகள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சம்யுக்தா கிஸான் மோர்ச்சா தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின் அவர் இதனைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் விவசாய அமைப்புகளின் தலைவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில், அரசியல் சார்பற்ற அமைப்பாகக் கருதப்படும் சம்யுக்தா கிஸான் மோர்ச்சாவை (எஸ்கேஎம்என்பி) சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 11.00 மணிக்கு நாடாளுமன்றம் சென்ற விவசாயிகள் சங்க தலைவர்களை காவல் துறையினர் அனுமதி இல்லை என தடுத்து நிறுத்தினர். இதனையறிந்து ஆவேசமடைந்தார் மக்களவை எம்பியான ராகுல் காந்தி, “ஐந்து நிமிடம் அவகாசம் தருகிறேன். அதற்குள் விவசாயிகளை உள்ளே அனுமதிக்க வேண்டும். இல்லையேல், சாலைக்கு சென்று அவர்களுடன் அமர்ந்து போராடுவேன்” என சபாநாயகரிடம் எச்சரித்தார்.

இதையடுத்து விவசாயத் தலைவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரையும், ராகுல் காந்தி தனது அறையில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவையும் ராகுல் பெற்றுக் கொண்டார். டெல்லியில் நடைபெற்ற விவசாயப் போராட்டக் களத்தில் காவல் துறை நடத்திய தாக்குதல் குறித்து விரிவாக கேட்டறிந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்தும் பொறுமையாகக் கேட்டறிந்தார். இந்த விவகாரத்தை புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளுடன் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

இந்தச் சந்திப்புக்கு பின் ராகுல் காந்தி, “குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டம் கேட்டு தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வேன். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்றும் வரை உங்களில் ஒருவராக நாடாளுமன்றத்தில் கொண்டு கொடுப்பேன். தொடர்ந்து போராடுவேன் விவசாயிகளை பாதுகாப்பதற்கு துணை நிற்பேன்” என்று உறுதி கொடுத்தார்.

பின்னர் விவசாயத் தலைவர்களை கைகோத்து அழைத்துச் சென்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விவசாயிகள் சந்திப்பிற்கு தலைமை வகுத்த தலேவால் கூறும்போது, “ஹரியாணா அரசு எங்கள் போராட்டத்தை தடுக்க கடுமையான சித்ரவதை செய்தது. எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இப்போது எங்கள் மீது தாக்குதல் நடத்திய அரசே விசாரணையும் நடத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே, இப்பிரச்சினையில் தனி விசாரணை தேவை என எதிர்க்கட்சித் தலைவரிடம் வலியுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறும்போது, “எம்எஸ்பி எனும் குறைந்தபட்ச ஆதார விலைக்காக சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம். விவசாயிகள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப இண்டியா கூட்டணி தலைவர்களுடன் பேசி முடிவு எடுப்போம்” என்றார். இந்தச் சந்திப்பில் தமிழகத்தின் சார்பில் விவசாயத் தலைவர் பி.ஆர்.பாண்டியனும் இடம் பெற்றிருந்தார். ராகுல் சந்திப்பின் குழுவுக்கு தலேவால் தலைமையேற்றார். சர்வன்சிங் பாந்தர், அபிமன்யூ, கர்நாடகா சாந்தகுமார், தெலங்கானா ராவ் உள்ளிட்ட 12 முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x