Published : 24 Jul 2024 05:29 AM
Last Updated : 24 Jul 2024 05:29 AM

மத்திய பட்ஜெட் 2024-25: மேம்பாட்டுக்கான முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு வருமான வரி நிலைக்கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரியில்லை. ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு மேல் உள்ள வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.

  • # வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • # இயற்கை வேளாண்மைக்கு அடுத்த இரண்டாண்டுகளில் நாடுமுழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
  • # புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • # மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • # தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது
  • # 25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • # தோல் மற்றும் ஜவுளி மூலப் பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது.

# 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு பிரதமரின் 5 திட்டங்கள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • # ஐந்தாண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்.
  • # 1,000 தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
  • # தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) பதிவு செய்து முதல் முறையாக சேரும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் (ரூ.15,000 வரை) 3 தவணைகளில் வழங்கப்படும்.
  • # நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகளிர் விடுதிகள், குழந்தை காப்பகங்கள் அமைக்கப்படும்.

# பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கு , மத்திய நிதி ரூ2.2 லட்சம் கோடி உட்பட ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

  • # பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் ஒருகோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்
  • # சோலார் செல் மற்றும் பேனர் தயாரிப்புகளுக்கான மூலப் பொருட்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • # 12 தொழில்துறை பூங்காக்கள் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

# 5 ஆண்டுகளில் ஒருகோடி இளைஞர்களுக்கு, 500 முன்னணி நிறுவனங்களில் தொழில் பழகுநர் வாய்ப்புகள் வழங்கும் வகையிலான விரிவான திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. அவர்களின் ஓராண்டு பயிற்சியில் மாதம் ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும். அதோடு ஒரு முறை நிதியுதவியாக ரூ.6,000 வழங்கப்படும். பயிற்சிக்கான செலவு மற்றும் 10 சதவீத உதவித் தொகையை தொழில் நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து அளிக்க வேண்டும்.

  • # தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்
  • # முத்ரா கடனுதவி திட்டத்தின் உச்சவரம்பு ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
  • # 100 உணவு தரநிலை மற்றும் பாதுகாப்புபரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
  • # குறு,சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • # வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
  • # திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
  • # வீட்டுவசதி திட்டத்தில் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர்.
  • # பத்திரப்பதிவு கட்டணத்தை திருத்தியமைக்க மாநிலங்கள் வற்புறுத்தப்படுத்தப்படும்.

# உலக அளவில் இந்தியாவை சுற்றுலா மையமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும். கயா மற்றும் புத்தகயாவில் உள்ள கோயில்கள் மேம்படுத்தப்படும்.

  • # ஒடிசாவில் நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் புனரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • # நாளந்தா பல்கலைக் கழகம் இருந்த இடம் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்

# விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. ரூ. 1000 கோடி ரூபாய் மூலதன நிதியில் விண்வெளி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரம் 5 மடங்காக அதிகரிக்கும்.

# ஆந்திராவில் புதிய தலைநகர் அமராவதியை கட்டமைக்க சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும்.

# பிஹாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.

# அசாம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை போன்றவற்றை தடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கவுள்ளது.

# கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த செலவினத் தொகை ரூ.48.21 லட்சம் கோடி

# நிகர வரிவருவாய் ரூ.25.83 லட்சம் கோடி. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x