Published : 23 Jul 2024 06:36 PM
Last Updated : 23 Jul 2024 06:36 PM

“சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்கும் மத்திய பட்ஜெட்!” - பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: "வளர்ந்த இந்தியாவுக்கான இந்த பட்ஜெட் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிப்பதுடன் வளர்ந்த இந்தியாவுக்கு வழி வகுக்கிறது" என்று மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

2024-25-க்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: "மத்திய பட்ஜெட் 2024-25, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கும். இது கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகளை செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்லும். 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்ட பிறகு, புதிய நடுத்தர வர்க்கம் உருவெடுத்திருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை அவர்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்ச்சியை சேர்ப்பதுடன், எண்ணற்ற வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.

இந்த பட்ஜெட் கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய உயரத்தைக் கொண்டு வந்துள்ளது. நடுத்தர வகுப்பினர், பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் வாழ்க்கையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பட்ஜெட், அதற்கான புதிய திட்டங்களுடன் இருக்கிறது. இந்தப் பட்ஜெட் பெண்களின் பொருளாதாரக் கூட்டாண்மையை உறுதி செய்யும் அதே வேளையில், சிறு வணிகங்கள், எம்.எஸ்.எம்.இ. ஆகியவற்றுக்கு ஒரு புதிய பாதையையும் அமைக்கும். மத்திய பட்ஜெட் உற்பத்தி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. இது தொடர்ச்சியைப் பராமரிக்கும் போது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பலத்தை அளிக்கும்.

வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு ஆகியவற்றில் அரசு உறுதியுடன் உள்ளது. பிஎல்ஐ திட்டம், கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்கும் வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், ஒரு இளைஞரின் முதல் வேலையின் முதல் சம்பளம் அரசால் ஏற்கப்படும். உயர்கல்விக்கான ஏற்பாடுகள், ஒரு கோடி இளைஞர்களுக்கான உள்ளகப் பயிற்சித் திட்டம் ஆகியவை மிகவும் முக்கிய அறிவிப்புகள். இத்திட்டத்தின் கீழ் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலம், இளம் பயிற்சியாளர்கள் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய முடியும்.

ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை அரசு கொண்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பிணையற்ற கடன்களின் வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது இதை காட்டுகிறது.

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற அரசு உறுதியுடன் உள்ளது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினருடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன. சிறு தொழில்களுக்கு பெரிய பலத்தை உருவாக்க, எம்.எஸ்.எம்.இ.களுக்கு எளிதான கடன் வழங்குவதை பட்ஜெட் உறுதிப்படுத்தி உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை எடுத்துச் செல்லும். இ-காமர்ஸ், ஏற்றுமதி மையங்கள், உணவு தரச் சோதனை ஆகியவை ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு திட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.

மத்திய பட்ஜெட் 2024-25, இந்தியாவின் ஸ்டார்ட்அப், புத்தாக்கச் சூழல் அமைப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. விண்வெளிப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க 1000 கோடி ரூபாய் தொகுப்பு நிதி, ஏஞ்சல் வரியை ரத்து செய்தல் ஆகியவை முக்கிய அறிவிப்புகள்.

12 புதிய தொழில்துறை முனையங்கள், புதிய செயற்கைக்கோள் நகரங்கள், 14 பெரிய நகரங்களுக்கான போக்குவரத்து திட்டங்கள் ஆகியவற்றுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. சாதனை படைத்த உயர் மூலதனச் செலவு பொருளாதாரத்தின் உந்து சக்தியாக மாறும். இது நாட்டில் புதிய பொருளாதார மையங்களை உருவாக்கவும், ஏராளமான வேலைகளை உருவாக்கவும் உதவும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் 'தற்சார்பை' பாதுகாப்புத் துறையில் உருவாக்க ஏராளமான ஏற்பாடுகள் உள்ளன. இந்தியா மீதான உலகத்தின் ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை ஏழைகள், நடுத்தரப் பிரிவினர் ஆகியோருக்கு ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், ஏழைகள், நடுத்தரப் பிரிவு மக்களுக்கு வரி நிவாரணத்தை அரசு உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரியைக் குறைத்தல், நிலையான கழிவை உயர்த்துதல், டிடிஎஸ் விதிகளை எளிமைப்படுத்துதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள் வரி செலுத்துவோர் அதிக பணத்தைச் சேமிக்க அனுமதிக்கும்.

பூர்வோதயா தொலைநோக்கு திட்டத்தின் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு புதிய உத்வேகமும், சக்தியும் கிடைக்கும். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கப்படும்.

இந்தப் பட்ஜெட்டில் நாட்டின் விவசாயிகள் மீது பெரும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்திற்குப் பிறகு, இப்போது காய்கறி உற்பத்தி தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது விவசாயிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவும். விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டியது காலத்தின் தேவை. எனவே, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உதவும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிராம சாலைகள் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில், 25,000 புதிய கிராமப்புறப் பகுதிகளை அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலைகளுடன் இணைக்கும். இன்றைய நிதிநிலை அறிக்கை புதிய வாய்ப்புகள், புதிய எரிசக்தி, புதிய வேலைவாய்ப்பு, சுய வேலை வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. இது சிறந்த வளர்ச்சியையும் பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டு வந்துள்ளது. இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கும், வளர்ந்த இந்தியா திட்டத்துக்கு வலுவான அடித்தளம் அமைப்பதற்கும் இந்த பட்ஜெட் ஓர் உந்து சக்தியாக இருக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x