Published : 22 Jul 2024 06:46 PM
Last Updated : 22 Jul 2024 06:46 PM

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு எதிரொலி: நிதிஷ் பதவி விலக லாலு வலியுறுத்தல்

பாட்னா: பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “பதவிக்காக, பிஹார் மக்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கை விஷயத்தில் நிதிஷ் குமார் சமரசம் செய்து கொண்டுள்ளார். பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது மாநில மக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் உறுதி அளித்திருந்தார். ஆனால், பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்த வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு நிராகரித்துவிட்டது. எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அக்கட்சி தனது கோரிக்கையை வலியுறுத்தியது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு அறிக்கை 2012-ன் படி பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராம்பிரித் மண்டலுக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், “கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணங்களுக்காக கடந்த காலங்களில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் சில மாநிலங்களுக்கு திட்ட உதவிக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை அடர்த்தி, பழங்குடியினர் கணிசமாக வசிப்பது, அண்டை நாடுகளுடனான எல்லையில் இருக்கக் கூடிய மாநிலங்கள், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலை, போதிய அளவு நிதி ஈட்டுவதற்கு சாத்தியமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

இத்தகைய காரணிகள் மற்றும் மாநிலத்தின் மாறுபட்ட சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பிஹாரின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பரிசீலித்த மத்திய அமைச்சர்கள் குழு, 30 மார்ச் 2012 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போதுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் அளவுகோல்களின் அடிப்படையில், பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்பதைக் கண்டறிந்தது”என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x