Published : 22 Jul 2024 06:14 PM
Last Updated : 22 Jul 2024 06:14 PM

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

பிரதமர் மோடியுடன் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் | கோப்புப் படம்

புதுடெல்லி: பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அக்கட்சி தனது கோரிக்கையை வலியுறுத்தியது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு அறிக்கை 2012-ன் படி பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராம்பிரித் மண்டலுக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், “கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணங்களுக்காக கடந்த காலங்களில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் சில மாநிலங்களுக்கு திட்ட உதவிக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை அடர்த்தி, பழங்குடியினர் கணிசமாக வசிப்பது, அண்டை நாடுகளுடனான எல்லையில் இருக்கக் கூடிய மாநிலங்கள், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலை, போதிய அளவு நிதி ஈட்டுவதற்கு சாத்தியமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

இத்தகைய காரணிகள் மற்றும் மாநிலத்தின் மாறுபட்ட சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பிஹாரின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பரிசீலித்த மத்திய அமைச்சர்கள் குழு, 30 மார்ச் 2012 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போதுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் அளவுகோல்களின் அடிப்படையில், பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்பதைக் கண்டறிந்தது”என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஐக்கிய ஜனதா தளத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தவிர, சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரியுள்ளது. கடந்த 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு புதிதாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதன் காரணமாக இந்த கோரிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தி வருகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விட இது குறைவு. பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இரண்டும் இணைந்து 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x