Published : 22 Jul 2024 07:37 AM
Last Updated : 22 Jul 2024 07:37 AM

பாஜக தலைமையிலான மத்திய அரசு விரைவில் கவிழும்: மம்தா, அகிலேஷ் யாதவ் கருத்து

மம்தா, அகிலேஷ் யாதவ்

கொல்கத்தா: ‘‘பாஜக தலைமையிலான மத்திய அரசு விரைவில் கவிழும்’’ என கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் தியாகிகள் தின பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூறினர்.

கொல்கத்தாவில் கடந்த 1993-ம் ஆண்டு மேற்குவங்க இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக திரிணமூல் காங்கிரஸ் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினம் அனுசரிக்கிறது. இந்தாண்டு தியாகிகள் தின பேரணி கொல்கத்தாவின் தர்மதலா நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர்அகிலேஷ் யாதவ் மற்றும் இதரகட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்த பேரிணிக்கு தலைமை தாங்கிய மம்தா பானர்ஜி பேசிய தாவது:

மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்காது. இது நிலையான அரசு அல்ல. மிரட்டல் மூலமாக பாஜக மத்திய அரசை அமைத்துள்ளது. அதனால் இது விரைவில் கவிழும். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான், 38 சதவீத எம்.பி.க்கள்பெண்களாக உள்ளனர்.

தேர்தலுக்கு முன்பு, அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடுவழங்குவதாக பலர் கூறினர். ஆனால், அவர்களால் முடியவில்லை. பெண் எம்.பி.க்களுக்கு 38 சதவீதத்தை உறுதி செய்த ஒரே கட்சி திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

இந்த பேரணியில் பேசிய அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘மத்திய அரசு நீடிக்காது எனநான் மக்களவையில் ஏற்கெனவே கூறினேன். அதை நான் மீண்டும்கூறுகிறேன். இந்த அரசு கவிழும்.மகிழ்ச்சியான நாட்களை நாம் மீண்டும் பார்ப்போம்.

மேற்குவங்க மக்கள், பாஜகவுடன் போராடி அதை தோல்வியடைச் செய்துள்ளீர்கள். இதேதான் உத்தர பிரதேசத்திலும் நடைபெற்றுள்ளது. மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் இன்னும் சில நாட்கள்தான் அதிகாரத்தில் இருப்பர்’’ என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜிபேசுகையில், ‘‘பாஜக தனதுவெற்றிக்கு மத்திய விசாரணை அமைப்புகளையும், பணபலத்தையும் நம்பியுள்ளது. ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்ததாக மேற்குவங்கத்தில் பார்த்த சட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஆனால் நீட் தேர்வு முறைகேட்டுக்காக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஏன் கைது செய்யக் கூடாது?’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x