Published : 18 Jul 2024 06:14 PM
Last Updated : 18 Jul 2024 06:14 PM

மோடி ஆட்சியில்தான் பெரிய ரயில் விபத்துகள் - பட்டியலிட்டு காங். குற்றச்சாட்டு

உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

புதுடெல்லி: நரேந்திர மோடி ஆட்சியில்தான் நாட்டில் பெரிய ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2014 முதல் இதுவரை மோடியின் ஆட்சியில் 13 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளதை பட்டியலிட்டுள்ளது. இந்த விபத்துக்களுக்கெல்லாம் யர் பொறுப்பு என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டள்ள பதிவில், "மோடியின் ஆட்சியில்தான் பெரிய ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. மே 26, 2014 அன்று கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மார்ச் 20, 2015-ல் ஜந்தா எக்ஸ்பிரஸ் விபத்தில் 58 பேர் உயிரிழந்தனர், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நவம்பர் 20, 2016ல் நடந்த இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் விபத்தில் 150 பேர் இறந்தனர், 15-0க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதேபோல், ஜனவரி 21, 2017-ல் நடந்த ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர், 68-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 18, 2017-ல் பூரி-ஹரித்வார் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 23 பேர் இறந்தனர், 60 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 23, 2017-ல் நிகழ்ந்த கைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 70 பேர் காயமடைந்தனர். அக்டோபர் 10, 2018-ல் நடந்த புதிய ஃபராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிப்ரவரி 3, 2019-ல் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில் 7 பேர் இறந்தனர், 37 பேர் காயமடைந்தனர். ஜனவரி 13, 2022ல் நிகழ்ந்த பிகானிர் - குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 9 பேர் இறந்தனர், 36 பேர் காயமடைந்தனர். ஜூன் 2, 2023-ல் பாலசோர் ரயில் விபத்துக்குள்ளானதில் 296 பேர் உயிரிழந்தனர், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அக்டோபர் 11, 2023-ல் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜூன் 17, 2024-ல் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று ஜூலை 18, 2024-ல் திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இதற்கு யார் பொறுப்பு?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x