Published : 18 Jul 2024 03:22 PM
Last Updated : 18 Jul 2024 03:22 PM

வேஷ்டி அணிந்ததால் விவசாயிக்கு அனுமதி மறுப்பு: வணிக வளாகத்தை ஒருவாரம் மூட கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: வேஷ்டி அணிந்துவந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த குற்றச்சாட்டில் சிக்கிய பெங்களூரு ஜிடி மாலை ஒரு வாரம் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜிடி மாலில் செவ்வாய்க்கிழமை விவசாயியான ஃபக்கீரப்பாவும், அவரது மகனும் படம் பார்க்கச் சென்றனர். அதற்காக டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தனர். அதன்படி, படம் பார்க்க வரும்போது விவசாயி வெள்ளை வேஷ்டி, தலையில் முண்டு கட்டி பாரம்பரிய உடையில் சென்றார். ஆனால், வேஷ்டி அணிந்து மாலுக்குள் நுழைய முதியவரை அங்கிருந்து பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அவரது மகன் பாதுகாவலர்களுடன் பேச முயல, வேஷ்டியை மாற்றிவிட்டு வேறு உடையில் வந்தால் மட்டுமே மாலுக்குள் அனுமதி என கூறி அவர்களை வெளியேற்றினர்.

“நீண்ட தூரத்தில் இருந்து பயணித்து பெங்களூரு வந்திருப்பதால் உடனே ஆடையை மாற்ற முடியாது. மேலும் நான் கிராமத்தில் இருந்து வருகிறேன்” என்று அந்த விவசாயியும் அவரது மகனும் பாதுகாவலர்களிடம் விளக்குகின்றனர். ஆனால், அதனை அவர்கள் ஏற்க மறுத்து மாலை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துகின்றனர். வேறு வழியில்லாமல், அவர்களும் மாலை விட்டு வெளியேறினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாக விவகாரம் சர்ச்சையானது. கர்நாடக பாஜகவின் செய்திதொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடக காங்கிரஸ் விவசாயிகளுக்கு எதிரானது” என்று கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார். இதேபோல் கன்னட ஆதரவாளர்களும், கன்னட விவசாயிகளும் இந்த சம்பவத்தை கண்டித்து வேஷ்டி அணிந்து மாலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தினர்.

கண்டனங்கள் வலுத்த நிலையில், மால் உரிமையாளர் மற்றும் பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. தொடர்ந்து தற்போது ஜிடி மாலை ஒரு வாரம் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசாங்க விதிகளின்படி ஜிடி மாலை ஒரு வாரம் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அம்மாநில நகர வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயியை அனுமதிக்காதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x