Published : 18 Jul 2024 09:41 AM
Last Updated : 18 Jul 2024 09:41 AM

காசா போரை நிறுத்த, நிபந்தனையின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்தியாவின் துணைப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரா

நியூயார்க்: காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் போரை உடனடியாக, முழுமையாக நிறுத்த வேண்டும். ஹமாஸ் தன் வசம் உள்ள பிணைக் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை நடந்த விவாதத்தில் இந்தியாவின் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா பேசியதாவது: பாலஸ்தீன வளர்ச்சியில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியா உதவி செய்து வருகிறது. இதுவரை 120 மில்லியன் டாலர் அளவில் உதவிகளை செய்துள்ளது. கடந்த அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை வலுவாகக் கண்டித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேவேளையில் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று எப்போதுமே வலியுறுத்தியுள்ளோம். அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

அந்த வகையில் காசாவில் போரை முழுமையாக, உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கு மனிதாபிமான உதவிகள் எவ்வித தடையுமின்றி சென்று சேர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். அதேபோல் ஹமாஸும் எவ்வித நிபந்தனையின்றியும் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்குக் கரையில் யாருக்கு உரிமை என்ற சிக்கலில் காசா இப்போது போர்க்களமாகியுள்ளது. இந்நிலையில், “இந்தப் பிரச்சினைக்கு நிலைத்த நீண்டகால தீர்வாக பாலஸ்தீனத்தின் இறையாண்மை பாதிக்கப்படாமல் சாத்தியமான, சுதந்திரமான இரண்டு நாடு தீர்வே இந்தியாவின் நிலைப்பாடு” என்று ரவீந்திரா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x